இன்று தை அமாவாசை : புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தை அமாவாசை தினமான இன்று காவிரி, தாமிரபரணி படித்துறைகளில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
திருச்சி / திருநெல்வேலி: தை அமாவாசையை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றின் கரைகளிலும், தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளிலும் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூர் கடற்கரை, வேதாரண்யம், கோடியக்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி திதி கொடுத்தனர்.
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாகவே திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசையில் பலரும் வீடுகளிலேயே திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தற்போது தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புனித நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தை அமாவாசை தினமான இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் நீராடி பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, முசிறி காவிரி படித்துறை, முக்கொம்பு காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இதேபோல, திருநெல்வேலியில் தாமிரபரணி பாயும் குறுக்குத்துறை முருகன் கோவில் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி நெல்லை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்து முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து வருகின்றனர் இங்கு தர்ப்பணம் செய்வது காசியில் தர்ப்பணம் செய்வதற்கு நிகரானது என்பது மக்களின் நம்பிக்கை.
16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பபணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்செந்தூரில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் அளித்தனர், இதே போல குற்றாலம் அருவிக்கரைகளிலும் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் அளித்தனர்.
முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இன்றைய தினம் காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. தீராத கடன் தொல்லைகள் தீரும். தடைகள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications