ஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்திற்காக மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு நீக்கப்பட்டு, பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். 32 வகை அபிஷேகங்கள், ஆருத்ரா தரிசனம் முடிந்த பின்னர் தற்போத
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் உள்ள புகழ்பெற்ற பச்சை மரகத நடராஜருக்கு, ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதன்பின்னர், நேற்று விடியற்காலை அருணோதய வேளையில் மரகத நடராஜருக்கு மீண்டும் புதிய சுத்தமான சந்தனக்காப்பு பூசப்பட்டது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.
உலகின் முதல் சிவாலயமாக போற்றப்படுவது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவில். இக்கோவிலில் தான் சிவபெருமான் உண்ணுவதும் உறங்குவதும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இக்கோவிலில் உளள நடராஜர் சிலை தான் உலகில் உருவான முதல் நடராஜர் சிலையாகும். அதிலும் இச்சிலையானது முழுக்க முழுக்க பச்சை மரகதத்தால் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை என்பது சிறப்பாகும்.

நடராஜர் சிலை முழுவதும் மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால், அதிக அளவிலான ஒலியோ, அதிர்வுகளோ ஏற்பட்டால், நடராஜர் சிலைக்கு சேதம் ஏற்படும் என்பதால், ஆண்டு முழுவதும் நன்கு அரைக்கப்பட்ட தூய சந்தனத்தைக் கொண்டு பூசி காப்பிட்டு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டுமே, மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு நீக்கப்பட்டு, பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆருத்ரா தரிசன நிகழ்வு முடிந்த பின்பு, மீண்டும் சந்தனக் காப்பிட்டு மறைத்து விடுவார்கள். மற்ற நாட்களில் எல்லாம் ஸ்படிக லிங்கத்திற்கு தான் அனைத்து அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பச்சை மரகத நடராஜரின் மேல் சாத்தப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டது. பின்னர் காலை 10:30 மணி முதல் சந்தனம் களையப்பட்ட மூலவரான மரகத நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன. மேலும், சந்தனாதி தைலங்கள் பூசப்பட்டன. கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் கரும்பச்சை நிறத்தில் மூலவரான மரகத நடராஜர் காணப்பட்டார். இதனையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று சூரிய உதயத்திற்கு முன்புக அருணோதய நேரத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்று, மரகத நடராஜர் திருமேனிக்கு மீண்டும் புத்தம் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவகாமி அன்னையுடன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காலை 10 மணியளவில் கூத்தர் பெருமான் திருவீதியுலாவும், மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், வெள்ளி ரிஷப வாகன சேவையும், இரவு 8 மணியளவில் மாணிக்கவாசகருக்கு எம்பெருமான் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
எம்பெருமான் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரை நட்சத்திர நாளன்று, ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது மிகவும் புண்ணியம் என்பதால், ராமநாதபுரம் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications