விளம்பி தமிழ் புத்தாண்டு 2018 -19: சிம்மம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்
தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட சிம்மராசி நேயர்களே...இந்த விளம்பி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஆரம்பத்தை விட குரு பெயர்ச்சிக்குப் பிறகு தனித்துவம் மிக்க பலன்களைத் தரும்.
Recommended Video
சென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. சிம்மம் ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டின் முதல்பகுதியை விட பிற்பகுதியில் அதிக நற்பலன்கள் கிடைக்கும்.
புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது. இது நன்மை தரும் அமைப்பாகும்.
குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். சிம்மம் ராசிக்காரர்களுக்கு விளம்பி புத்தாண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
சிம்ம ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும் காலம் வந்து விட்டது. இனி எல்லாம் சுகமே என்று மகிழ்ந்திருக்கக் கூடிய தமிழ் புத்தாண்டாக விளம்பி ஆண்டு அமையப்போகிறது.
செலவுகள் அதிகரிக்கும்
தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் குருபகவான் அமர்ந்துள்ளார். இது சிறப்பில்லைதான் என்றாலும் புரட்டாசி மாதம் குரு பெயர்ச்சியால் சில நன்மைகள் நிகழும். சின்னச் சின்னச் செலவுகள் வந்து செல்லும் அதை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளவும்.
செல்வம் சேரும்
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கவலைகள் தீரும் காலமாகும். குடும்பத்தில் வீட்டம்மாவிற்கும் குழந்தைகளுக்கும் நகைகள் வாங்கி தரக்கூடிய நேரம் வந்து விட்டது. வங்கிகளில் சேமிப்புகளில் முதலீடு செய்யலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கடன் கொடுக்க வேண்டாம்
எந்த காரணத்தைக் கொண்டும் கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அப்புறம் பணத்தை திரும்பி வாங்கவே முடியாது. கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
குழந்தைகளை கண்காணியுங்கள்
சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். செவ்வாயால் உங்களுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கும்.
புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வையுங்கள். பிள்ளைகளின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள்.
வெளிநாடு யோகம்
ராகு பகவான் 12ஆவது வீட்டில் கடகத்தில் அமர்ந்து இருக்கிறார். வெளிநாடு செல்லும் யோகம் வரும். கேது பகவான் ஆறாம் இடத்தில் இருக்கும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறப்பதால் ஆன்மிகப் பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகங்கள் விழாக்களில் பங்கெடுப்பீர்கள், ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். பிப்ரவரி மாதம் ராகு லாப ஸ்தானத்திலும் கேது 5வது வீட்டிற்கும் நகர்வது நன்மை தரும் அமைப்பாகும்.
தொழிலில் வளர்ச்சி
தொழில் வியாபரத்தில் புதிதாக முதலீடு செய்வது, புதிதாகத் தொழில் தொடங்குவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
சிம்ம ராசிக்கார விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் அமோகமாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இது நன்மை தரும் ஆண்டாக அமையும், அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு ஆரம்பத்தில் சின்னச் சின்ன சோர்வுகளை ஏற்படுத்தினாலும் பிற்பகுதியில் நன்மையை தரும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பிரதோஷ காலத்தில், சுவாதி நட்சத்திரத்தில் வழிபட மேலும் நன்மைகள் நடக்கும்.
[மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்]