சனி குரு ராகு கேது பெயர்ச்சி: கடகம் ராசிக்கு தலைக்குமேல் கத்தி.. சிக்கல்களை கொடுக்கும் ராகு கேது
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இது கடக ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது கடக ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
கடகம்: அஷ்டம சனி விலகுவதால் தீமைகள் குறையும். சுப விரயம் நடைபெறும். வீடு, நிலம் வாங்குவதற்கு இது உகந்த காலம். நீண்ட காலமாக திட்டமிட்ட வீடு புனரமைப்புக்கும் சரியான காலம். வெளிநாடு முயற்சிக்கு இது அருமையான காலம். வெளிநாடு பயணத்தால் ஆதாயம் உண்டு. பெண்கள் விலை மதிப்பு மிக்க அத்தியாவசிய ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்
நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்கள் நிறைவேறும். மனச்சங்கடங்கள் நீங்கும். திருமணத்தில் இருந்த தடை நீங்கி இந்த காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரம் திருமணத்தில் நிறைவேறும். பொருளாதாரத்தில் இருக்கும் மந்த நிலை ஓரளவுக்கு சீராகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். சனியை தவிர குரு, ராகு கேது ஆகிய மூன்று அமைப்புகளும் அவ்வளவு சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. குரு பகவான் 11 ஆம் இடத்தில் இருந்து 12 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த அமைப்பையும் அவ்வளவு ஆரோக்கியமானதாக சொல்ல முடியாது.
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் ஓரளவுக்கு குறையும். இருப்பினும் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது. அஷ்டம சனி விலகினாலும் ராகு கேது பெயர்ச்சியால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் அவசியம்.
தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழிலில் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடன் பணியாற்றுவோரை அனுசரித்து செல்வது நல்லது.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எனவே வீண் விவாதத்தை தவிர்க்கவும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரிவுகளை தவிர்க்கலாம். தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் புதிய முயற்சிகள், முதலீடுகளை தவிர்ப்பது நஷ்டத்தை தவிர்க்க உதவும். நிதானம் மிக மிக அவசியம்.












Click it and Unblock the Notifications