ஏழரை சனி, அஷ்டம சனி.. தலையில் குட்டும் சனிபகவான்..என்ன செய்யலாம்..என்ன செய்யக்கூடாது
சென்னை: ஏழரை சனி என்றாலே பலருக்கும் அச்சம் வரும். அதை விட பாதிப்பு அஷ்டம சனி காரர்களுக்குத்தான். இப்போது நடைபெறும் சனி பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம், ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி. சனிபகவானின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சனி பகவான் நீதிமான். நல்லவர்களாக இருந்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் தலைகணம் பிடித்து மமதையில் ஆடினால் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை" என்றும், "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனியாகவும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும் பயணம் செய்கிறது. ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும்.
கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்துக்கொண்டு உள்ளது. தற்போது வக்ர கதியில் பயணம் செய்யும் சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலமாக உள்ளது. அதே போல விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
சிலருக்கு காகம் விரட்டி விரட்டி கொத்தும். சிலருக்கோ குப்பை மேலே வந்து விழும். இது எல்லாமே சனி பகவான் செய்யும் லீலைகள்தான்.
சனி பகவானால் சங்கடங்களை சந்தித்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
தினமும் உலர் திராட்சையை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு என்று சித்தர் கூறியுள்ளார். அதே போல வன்னிமரத்தடி விநாயகருக்கு நாம் பச்சரிசி குருணை, பச்சரிசி மாவு கோலம் போடலாம். எறும்புகளுக்கு பச்சரிசியை உணவாக கொடுக்க சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். சனிக்கிழமையில் சாதத்தில் தயிர் எள் சேர்த்து காகத்திற்கு உணவு கொடுக்கலாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாக ஐதீகம். நம்முடைய முன்னோர்களும் மகிழ்ச்சி அடைவார்களாம். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications