சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி என்ன செய்யும்? யாருக்கு ஏழரை தொடங்குது?
மதுரை: ஒருவருக்கு ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் தடுமாற வேண்டாம்.
ஏழரை சனி என்றால் என்ன: ஒருவரின் ஜென்ம ராசிக்கு 12, 1,2 ஆம் வீடுகளில் சனி பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். ஏழரை சனி என்றாலே பலரும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். சனி பகவான் ஏழரை சனி காலத்தில் எல்லோருக்கும் படிப்பினைகளை கொடுப்பார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது என்று சொல்லி திட்டுவார்கள்.

சனி யாருக்கு பாதகம்: கும்பம் ராசியில் பயணம் செய்யும் சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்பம் ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்மம் ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியையும் பார்வையிடுகிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பாதிப்புகளுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஏழரை முடிவு: தனுசு ராசிக்காரர்களே கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். 2024ஆம் ஆண்டு முதல் உங்கள் சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பல ஆண்டுகாலமாக பணம் வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் திருப்பி தருவார்கள். வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.
குடும்ப சனி: மகர ராசிக்காரர்களுக்கு தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி இனி இரண்டரை ஆண்டு காலம் உள்ளது. வருமானம் அதிகரிக்கும். சனி பகவான் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். பொறுமை தேவை இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள் அதை காப்பாற்ற படாத பாடு பட வேண்டும்.
தலைமேல் அமர்ந்த சனி: கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். சனி பகவான் தலைமேல் அமர்ந்தாலும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் வெற்றிகளை தேடி தரப்போகிறார். தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும்.
மீனம் ஏழரை ஆரம்பம்: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. விரைய சனி. சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவுகள் வரும். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். குடும்பத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications