மகாசிவராத்திரி விழா : காளஹஸ்தியில் 24ல் கொடியேற்றம் - மார்ச் 2ல் தேரோட்டம், தெப்ப உற்சவம்
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் வாயு ஸ்தலமான காளஹஸ்தியில் மகா சிவராத்திரி விழா மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பக்த கண்ணப்பநாயனார் கொடியேற்றமும், தொடர்ந்து 25ஆம் தேதியன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் கொடியேற்றமும் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரி விழா மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
புகழ்பெற்ற ராகு-கேது பரிகால ஸ்தலம் ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். இக்கோயில் பஞ்சபூத கோயில்களில் வாயு ஸ்தலமாகவும் விளங்குகிறது. அதோடு, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனாருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து ஆட்கொண்ட தலமும் ஆகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி பிரம்மமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று தொடங்குகிறது.

கண்ணப்பநாயனார் கோவில் கொடியேற்ற விழா
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனார் கொடியேற்ற வைபவமும், அதைத் தொடர்ந்து 25ஆம் தேதியன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் கொடியேற்ற வைபவமும் நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

மகா சிவராத்திரி தேரோட்டம்
அதை முன்னிட்டு, அன்றைய தினம் இரவில் நந்தி வாகனத்தில் சிவன், அம்பாள் ஊர்வலமும், மார்ச் 2ஆம் தேதியன்று அதிகாலையில் லிங்கோத்பவர் தரிசனமும், காலை 9 மணியளவில் தேர்த்திருவிழா வைபவமும், அன்றைய தினம் இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

திருக்கல்யாண வைபவம்
மார்ச் 3ஆம் தேதி இரவில் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவ வைபவமும், மார்ச் 4ஆம் தேதியன்று நடராஜர் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். மார்ச் 5ஆம் கைலாசகிரி மலையில் கிரிவல நிகழ்ச்சியும், மார்ச் 6ஆம் தேதியன்று அதிகாலையில் திரிசூல ஸ்நானமும் தீர்த்தவாரி வைபவமும், அன்றைய தினம் இரவில் கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்.

பல்லாக்கு சேவை
மார்ச் 7ஆம் தேதியன்று இரவில் சிவன்-அம்பாள் பல்லக்கு சேவையும், 8ஆம் தேதி இரவில் ஏகாந்த சேவையை ஒட்டி, கோயிலுக்குள் பல்லக்கு சேவையும், மார்ச் 9ஆம் தேதியன்று சாந்தி அபிஷேகமும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, கோயிலுக்குள் வழக்கமாக நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications