திருச்செந்தூர் கோவிலில் ரூ.250 சாமி தரிசன கட்டணம் ரத்து.. இன்று முதல் அமல்.. பக்தர்கள் ஹேப்பி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கட்டண முறையில் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ 20 மற்றும் ரூ 250 தரிசன கட்டணச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலயம். முருகன் கோவில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில் கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த ஆலயத்திற்கு தனி சிறப்பு உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்த தலம் என்பதால் எதிரிகள் தொல்லை நீங்க இங்கு வந்து பலரும் வழிபட்டு செல்கின்றனர்.
இங்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம். பக்தர்கள் மாலை அணிந்து பாதையாத்திரையாக காவடி சுமந்து வந்து தரிசனம் செய்கின்றனர். இங்கு பொது தரிசனம், 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என கட்டணங்கள் சாமி தரிசனத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய முடியும்.
ரூ. 250 கட்டண தரிசனம் ரத்து
அதே நேரத்தில் கோவிலில் உள்ள குருக்கள் மூலம் எளிதில் சாமி தரிசனம் செய்ய சில நேரங்களில் ஒருவருக்கு 500 ரூபாய் வரை செலவாகும். இது வரிசையில் நிற்கும் பக்தர்களை சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
நீதிமன்ற உத்தரவு
இதுதொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருச்செந்தூர் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவுபடி, இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகளை உத்தரவாக பிறப்பித்தார்கள். இதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது.
பொது தரிசனம்
ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும். இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோவிலில் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் சமம்
அதே போல் கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது.
விஐபி தரிசனத்திற்கு தனி நேரம்
விஐபி தரிசனத்திற்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோவிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.