சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனியின் பிடியில் 3 ராசிக்காரர்கள்.. 2024ல் யாரெல்லாம் கவனம்
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நாளைய தினம் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு ஆலயத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். ஏழரை சனியால் சில ராசிக்காரர்கள் பாதிக்கப்பட உள்ளனர். 2024ஆம் ஆண்டில் என்ன பரிகாரம் செய்தால் பாதிப்பு குறையும் என்று பார்க்கலாம்.
திருநள்ளாறு சனி பெயர்ச்சி: காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது நாளைய தினம் நடைபெற உள்ளது.

48 நாட்கள் மண்டல பூஜை: சனி பெயர்ச்சியின் போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்து நளன் திருக்குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை எள்தீபம் ஏற்றி வணங்கி செல்வார்கள். 48 நாட்கள் மண்டல பூஜையும் நடைபெற உள்ளதால் பக்தர்கள் விடுமுறை நாட்களில் சனிபகவான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.
துலாம்: வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும்.
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், புண்ணிய சனி காலம் என்பதால் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம். திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் சேர்க்க முடியாது அதற்கு பதிலாக சொத்துக்கள் வாங்குவீர்கள். சச மகா யோகத்தால் வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். அர்தாஷ்டம சனியால் பாதிப்புகள் குறைய பெருமாள், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
தனுசு: 2024 ஆண்டு உங்கள் ஆண்டாக அமையப்போகிறது. ஏழரை ஆண்டு காலம் கஷ்டத்தை சந்தித்த உங்களுக்கு சனிபகவான் நிறைய வருமானத்தை தரப்போகிறார். கடன் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்கப்போகிறார். சொத்து சுகங்களை வாரி வழங்கப்போகிறார். இனி பல சாதனைகளை நிகழ்த்தப்போகிறீர்கள். சந்தோஷங்களை உற்சாகத்துடன் அனுபவிக்கத் தயாராகுங்கள். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் நன்மைகள் அதிகரிக்கும்.
மகரம்: சனி பகவான் பாத சனியாக தொடரப்போகிறார். பொறுமையும் நிதானமும் தேவை. சொந்த பந்தங்களிடம் ஏற்பட்ட பகை விலகும். ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டில் பாத சனியாக தொடர்கிறார். வீண் வம்பு வாக்குவாதங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும் என்பதால் சங்கடப்பட வேண்டாம். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வர சிறப்பான பலன்களைப் பெறலாம். சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம் என்பதால் தேனி மாவட்டம், சின்னமனு}ர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம்.
மீனம்: உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்துவது நல்லது. கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகின்றனர். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மிகப்பெரிய பட்டமும் பதவியும் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த நல்ல காரியங்கள் இந்த ஆண்டு நிறைவேறப்போகிறது. இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது. விரைய சனி நிறைய செலவுகளை கொடுப்பார் எனவே சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கலாம்.
பரிகாரம் என்ன: அர்த்தாஷ்டம சனி, ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை நாளில் சனிஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். எள் தயிர் கலந்த சாதத்தை சனிக்கிழமை நாளில் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது நல்லது. நீல நிற சங்குபூக்களும் வன்னி மர இலை, வில்வ இலை மாலை கட்டி சனிபகவானை வணங்கலாம்.












Click it and Unblock the Notifications