விஜய் கூட என்னால போட்டி போட முடியாது.. ஒரே நேரத்தில் ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன் விளக்கம்
சென்னை: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய படங்கள் நேரடியாக மோத இருப்பது, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களின் மோதல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, "சிவகார்த்திகேயன் விஜய்க்கு நேரடி போட்டியாக களமிறங்குகிறார்" என்ற கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்களின் ஒரு பகுதி சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து, திட்டி தீர்த்து வருகின்றனர்.

சின்னத்திரையில் இருந்து தனது கலைப் பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், கடின உழைப்பின் மூலம் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, அவரது மார்க்கெட் மதிப்பை இன்னும் உயர்த்தியுள்ளது. அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவே சிவகார்த்திகேயன் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
மற்றொரு புறம், நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக காலடி எடுத்து வைத்துள்ளதால், அவர் விரைவில் சினிமாவை விட்டு விலகுவார் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதன் காரணமாக, "விஜய் அரசியலுக்கு சென்ற பிறகு அவரது இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார்" என்ற கருத்தும் கடந்த சில காலமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் நடித்த GOAT படத்தில் சிவகார்த்திகேயனிடம் "இந்தாங்க சிவா, துப்பாக்கியை பிடிங்க" என்று கொடுக்கும் காட்சி, இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது.
இந்நிலையில், விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அதே நாளில், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படமும் வெளியாக இருப்பது, "இது திட்டமிட்ட மோதலா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த சூழலில், சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: "எனக்கு விஜய் சாருடன் மோத வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது. அவர் ஒரு மிகப் பெரிய நடிகர். அவரோடு நான் போட்டி போட முடியாது; அதற்கு ஆசைப்படுகிறவனும் இல்லை. நான் மட்டுமல்ல, என்னைப் போல வளர்ந்து வரும் நடிகர்கள் எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். அது என்னன்னா, ஒரு லீவு நாளில் நம்ம படம் வெளியாகணும், மக்கள் வந்து பார்க்கணும் என்பதுதான்.
இது நடிகருக்கான ஆசை மட்டுமல்ல, தயாரிப்பாளர் தரப்பிலும் இருக்கும் விருப்பம்தான். இப்போ நடந்தது அதுதான். எந்த சூழ்நிலையிலும் நான் விஜய் சாருக்கு போட்டியாக எதையும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கம் வெளியாகியதும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், விஜய் ரசிகர்களிடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தே வருகின்றன.
மொத்தத்தில், பொங்கல் வெளியீடு காரணமாக உருவான இந்த சர்ச்சை, உண்மையில் நடிகர்களுக்கிடையிலான மோதலா, அல்லது ரசிகர்கள் உருவாக்கிய தேவையற்ற விவாதமா என்பதற்கு பதில் கிடைப்பது, இரண்டு படங்களும் திரைக்கு வந்த பிறகே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications