நீளமான நகங்கள்.. ஆட்டின் தலை! திருவண்ணாமலையில் திடீர் பீதி.. அச்சம் வேண்டாம்! உண்மை இதுதான்
திருவண்ணாமலை: நீளமான நகங்களுடனும், ஆட்டின் தலையுடனும் உள்ள ஒரு அச்சமூட்டும் விலங்கு திருவண்ணாமலையில், பெண் ஒருவரை தாக்கியதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையில்லை என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கியுள்ளது.
கடந்த சில நாட்காளகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில், சில ஆபத்தான விலங்குகள் இருப்பதாகவும், அவை ஆடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்குவதாகவும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் திடீரென சில படங்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பரவலாக ஷேராகின. கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்த அந்த படத்தில், இருட்டில் ஒரு உருவம் நின்றுக்கொண்டிருக்கிறது. அது பார்ப்பதற்கு ஆடு போன்று தெரிந்தாலும், இரண்டு கைகளும், கால்களும் இருக்கின்றன. நகங்கள் கூர்மையாகவும், கண்களில் வேட்டை உணர்வும் நிரம்பி வழிவது போல அந்த உருவம் இருக்கிறது.
இதன் பெயர் அம்புலி என்றும், திருவண்ணாமலை காடுகளில் சுற்றித்திரிவதாகவும், சமீபத்தில் காட்டுக்கு சென்ற பெண் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின. மனிதர்களையும், கால்நடைகளையும் இது வேட்டையாடுவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் பயமுறுத்தின. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
வதந்தி
"திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான ஜீவன் காட்டில் திடீரென்று ஒரு பெண்ணைத் தாக்கிய சம்பவம்" என்று குறிப்பிட்டு சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
உண்மை என்ன?
"இது முற்றிலும் வதந்தியே. நீளமான நகங்கள். நான்கு விரல்களைக் கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை GOAT MAN என்றும், ஏலியன் என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது.
இது 2011ம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அதைப் பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள். வதந்தியை நம்பாதீர்!" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை இருக்கிறது. இது கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாகும். இங்கு ஆபத்தான மிருகங்கள் என எதுவும் கிடையாது. யானை, பாம்புகள், காட்டெருமைகள், நரிகள் மற்றும் கரடிகள் ஆகியவை வசிக்கின்றன. சில நேரங்களில் நரிகள் கால்நடைகளை தாக்குவதுண்டு. ஆனால் இதெல்லாம் மிகவும் அரிதாகவே நடக்கும். எனவே அச்சப்பட வேண்டியதில்லை.
Fact Check:
வெளியான செய்தி: வித்தியாசமான ஜீவன் காட்டில் திடீரென்று ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளது
முடிவு: இது முற்றிலும் வதந்தியே. அப்படி எந்த உருவமும் திருவண்ணாமலை காடுகளில் கிடையாது.
ரேட்டிங்: False













Click it and Unblock the Notifications