உலக அளவில் ட்விஸ்ட்.. ஈரான் - இஸ்ரேல் போரால்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் வங்கிகள்.. உஷாரா இருங்க!
நியூயார்க்: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பொருளாதாரம், மார்க்கெட் சரியும் நிலை ஏற்பட்டு உள்ளது. உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், மக்கள் பலரும் டாலர் மீதான நம்பிக்கையை இழக்க தொடங்கி உள்ளனர். இதனால் தங்கம் பாதுகாப்பான முதலீடாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. உலக தங்க கவுன்சில் (World Gold Council) மேற்கொண்ட ஆய்வின்படி.. இந்த போருக்கு இடையே மத்திய வங்கிகள் தங்கத்தை தொடர்ந்து சேமிக்க திட்டமிட்டுள்ளன.

மத்திய வங்கிகளின் தங்க இருப்பு: அதிகரிப்பு
உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட சமீபத்திய ஆய்வின்படி, கிட்டத்தட்ட 95% ரிசர்வ் வங்கிகள் அடுத்த 12 மாதங்களில் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.. 2019-ல் கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த அளவாகும், 2024 முடிவுகளுடன் ஒப்பிடும்போது 17% அதிகமாகும். அதாவது போன வருடம் வாங்கியதை விட 17% கூடுதலாக தங்கம் வாங்க இந்த வருடம் மத்திய வங்கிகள் முடிவு செய்துள்ளனர். தங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவது தெளிவாகிறது. இந்த போர் காரணமாக தங்கத்தின் இருப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது
அடுத்த ஆண்டுக்குள் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை சுமார் 43% விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலும், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வமாக உள்ளன. இது தங்கத்தின் மீதான அவர்களின் நீண்டகால நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் தங்கத்தின் மீதான ஆர்வம்
வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தின் எதிர்கால முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளன. 2024-ஆம் ஆண்டில், தங்கத்தின் மீது மத்திய வங்கிகளின் ஆர்வம் அதிகரித்ததினால், உலகளாவிய அளவில் இருப்பு சொத்துகளில் தங்கம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதாவது டாலர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் யூரோ இருந்தது. அதை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தங்கம் பிடித்துள்ளது.
தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் மத்திய வங்கிகள்
மத்திய வங்கிகள் தங்கத்தை கையிருப்பில் வைத்திருப்பது 1960-களின் அளவிற்கு மீண்டும் வந்துள்ளது. கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு பின் இந்த மாற்றம் நடக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்ததால், அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக தங்கம் மதிப்புமிக்க சொத்தாக உள்ளது என்று ஐரோப்பிய மத்திய வங்கி கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில், தங்கம் மற்றும் யூரோ இரண்டும் உலகளாவிய அதிகாரப்பூர்வ கையிருப்பில் சராசரியாக 16.5% ஆக இருந்தது. 2025-ஆம் ஆண்டில், இது யூரோவுக்கு 16% ஆகவும், தங்கத்துக்கு 19% ஆகவும் மாறியது. அமெரிக்க டாலர் 47% ஆக இருந்தது. பணவீக்கம் காரணமாக யூரோ மதிப்பு குறைவதால் மத்திய வங்கிகள் டாலர் மற்றும் தங்கம் போன்ற சொத்துகளை சேர்த்து வைத்திருக்கின்றன.
தங்கம் நீண்ட காலத்திற்கு மதிப்பு கொடுக்கும் மற்றும் நிலைத்தன்மையற்ற சூழ்நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. தற்போது மத்திய வங்கிகள் உலகளவில் தேவைப்படும் தங்கத்தில் 20%-க்கும் அதிகமாக கையிருப்பில் வைத்திருக்கின்றன. இது 2010-களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருந்தது.
தங்கம் வாங்கும் உலக நாடுகள்
உலகம் முழுக்க இருக்கும் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர்.
இந்தியா உட்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76% தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1% வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications