கெளுத்தி மீனில் ஆச்சரியங்கள்.. கர்ப்பிணிகள் மீன்களை சாப்பிடலாமா? மீனிலேயே பெஸ்ட் இதுதான்.. அற்புதம்
சென்னை: மீன்கள் சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை தரக்கூடியது என்றாலும், பெண்களுக்கு அதிக பலன்களை தரக்கூடியது. அந்தவகையில், எந்தெந்த வகைகளில் மீன்கள் உதவுகின்றன தெரியுமா?
மீன்கள் அனைவருக்குமே நல்லதுதான்.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது... மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.. மனித ஆயுளையும் கூட்டுகிறது.

நரம்புத்தளர்ச்சி: கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது... நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், இதய ஆரோக்கியத்திற்கு மீன்கள் நன்மை பயக்கின்றன. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கர்ப்பிணிகள் மீன் வகைகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாம்.. இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து, இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கின்றன.
ஆய்வுகள்: இதுக்காகவே, 11,875 கர்ப்பிணிகளிடம் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது, மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாம்.
அதாவது, அந்த குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போது, மூளை தொடர்பான நோய்கள் தாக்குவது குறைவாக இருப்பதுடன், குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும் என்று தெரியவந்துள்ளது.
கர்ப்பிணிகள்: அதுமட்டுமல்ல, இந்த ஆய்வானது கர்ப்பிணிகளிடமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப்பட்டிருக்கிறது. கர்ப்ப காலத்தின்போது அதிக மீன் உணவுகளை சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள், அதிக புத்திக்கூர்மையுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒமேகா 3 அமிலம்தான்.. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இதுதான் காரணமாக இருந்திருக்கிறது. அத்துடன், அரிதான அயோடின் சத்தும் கிடைக்கிறது.
இதனால், கருவின் மூளை வளர்ச்சியும் தூண்டப்படுகிறது.. ஆற்று மீன், சாலமன், நெத்திலி, மத்தி, சங்கரா மீன், வஞ்சரம், வவ்வால் மீன், கோலா மீன், காரப்பொடி மீன் இப்படியான மீன்கள் ஒமேகா 3 சத்துகள் கொண்டவை என்பதால், இவற்றை அளவோடு சாப்பிடலாம். வாளமீன், சுறா மீன், கெளுத்தி, மார்லின், BIG EYE TUNA போன்ற மீன்வகைகளில் மெர்குரி நிறைந்துள்ளதால், இதுபோன்ற மீன்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
திருக்கை மீன்: திருக்கை என்றாலே, அது தாய்மார்களின் உணவு என்பார்கள்.. பாலூட்டும் தாய்மார்கள், இந்த மீனை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரக்கும்.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் மிக குறைவாகவும், மிக ஆரோக்கியமான நல்ல கொழுப்பு ஒமேகா 3 அதிகமாகவும் இந்த மீனில் உள்ளதால், மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, வயதாகும்போது பார்வைத்திறனும் மேம்படும்.. குழந்தை பெற்ற பெண்கள் அதிக பால் சுரப்பிற்காக சாப்பிட வேண்டிய திருக்கை மீன்
பொதுவாக, கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவானது, வயிற்றிலுள்ள சிசுவையும் சென்றடையும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையை பெறாமல் சாப்பிடவும் கூடாது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications