கீரைகள் உடலுக்கு நல்லவைதான்.. ஆனால் இரவு நேரத்தில் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: உடலுக்கு நல்லதே என்றாலும் ஒரு சில உணவுகளை இரவு நேரத்தில் உண்ணக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். அதிலும் கீரையை இரவில் உண்ணவே கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.
ஒவ்வொரு உணவுக்கும் ஜீரணமாகும் நேரம் மாறுபடும். கஞ்சி, ஆவியில் வேக வைத்தவை எல்லாம் எளிதில் ஜீரணமாகிவிடும். அது போல் இறைச்சி உள்ளிட்டவை ஜீரணமாவதில் நேரம் எடுக்கும்.
சில உணவுகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் எதை எதை எப்போது சாப்பிட வேண்டுமோ அப்போது சாப்பிட்டால்தான் உடலில் எந்த பிரச்சினையும் வராது. இல்லாவிட்டால் நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக நீர் காய்கறிகளை இரவு நேரத்தில் எடுப்பதை காட்டிலும் பகல் நேரத்தில் எடுப்பதே சிறந்தது. காரணம் நீர் காய்கறிகளை இரவில் சாப்பிட்டுவிட்டு படுத்தால் அவர்களுக்கு தலைவலி, சீதளம், ஜலதோஷம் உள்ளிட்டவை ஏற்படும். எல்லாருக்கும் எல்லா அறிகுறியும் இருக்காது. ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் இது போன்று ஏற்படும்.
கீரைகள் உடலுக்கு நல்லது, அதில் நார்சத்துகள் அதிகம் உள்ளன. கண் பார்வைக்கும் நல்லது என்பார்கள். இதனால் தினசரி கீரையை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக இரவு நேரத்தில் கீரை சாப்பிடலாமா என்றால் அதற்கு பெரியவர்கள் வேண்டாம் என்பார்கள்.
இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்சத்துகளை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒரு வித மந்த நிலையை உருவாக்கிவிடும். இந்த கீரைகளால் அதிக கலோரிகள் கிடைக்கின்றன. இதனால் ஜீரணத்தில் சிக்கல் ஏற்படும்.

சிலருக்கு ஜீரணமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் காலையில் செய்த கீரையை பிரிட்ஜில் எடுத்து வைத்தும் சிலர் சாப்பிடுவார்கள். இதுவும் தவறு. மேலும் இரவு நேரத்தில் கீரையில் பூச்சிகள் ஏதாவது விழுந்துவிட்டாலும் தெரியாது என்பதால் 6 மணிக்கு மேல் கீரை சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
அது போல் அசைவ உணவுகளை இரவு 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விடவேண்டும். தாமதமாக சாப்பிட்டால் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். இரவு நேரங்களில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும் என மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications