ஸ்பெக்ட்ரம் சாட்சிகள் மிரட்டப்பட்டனர்.. நேர்மையாக விசாரணை நடைபெறவில்லை: ஆ. ராசா புகார்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் புலன்விசாரணை அதிகாரியான சி.பி.ஐ. துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் சஹால் ஆஜராகி நேற்று சாட்சியம் அளித்தார். அதற்கு முன்னதாக ஆ.ராசா தரப்பில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெறவில்லை. சாட்சிகள் மிரட்டித்தான் பணிய வைக்கப்பட்டனர் என்று வாதிடப்பட்டது.
இதை மறுத்த ராஜேஷ் சஹால், இந்த வழக்கில் நான் நேர்மையாக விசாரணை நடத்தவில்லை என கூறுவது தவறானது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக உள்ள ஆதார ஆவணங்களை நான் வேண்டுமென்றே நிறுத்தி வைத்து விட்டேன் என்று கூறினால் அது தவறானது. நான் என் மேலதிகாரிகளின் சட்டவிரோதமான உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போட உதவினேன் என்பதும் தவறு.
எனது மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, சில சாட்சிகளை நான் மிரட்டி பணியவைத்து, அவர்களை கட்டாய வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்தம் செய்தேன் என்று கூறுவது தவறானது. இந்த வழக்கில், சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் முடிவுப்படி நான் ஆ.ராசாவை கைது செய்தேன். நானும் சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஏ.கே.ஸ்ரீவஸ்தவாவை அச்சுறுத்தி, இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு ஆதரவாக நடந்துகொள்ளாவிட்டால், அவரையும் வழக்கில் சேர்த்து விடுவோம் என மிரட்டினோம், அந்த நிர்ப்பந்தத்துக்கு அவர் இரையாகி, எங்கள் சொல்படி நடந்து கொண்டார் என்றால் அதுவும் தவறானது என்றார்.