திருப்பூருக்கு அடிச்சது ஜாக்பாட்.. தமிழ்நாட்டில் வேலை தேடுவோர் உடனே கிளம்புங்க.. கொட்டப்போகும் பணமழை
திருப்பூர்: ஐரோப்பியாவில் நிலைமை மெல்ல மெல்ல மாறியதால், திருப்பூருக்கு ஆர்டர்கள் குவிய தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வேலை தேடுவோர் பின்னலாடை துறையில் வேலை கிடைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல சம்பளம், தங்குமிடம், உணவு வசதியுடன் வேலை ரெடியாக இருக்கிறது.
ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை, ரஷ்யா உக்ரைன் போர், வங்கதேசத்துடன் இந்தியா மேற்கொண்ட வரியில்லா ஒப்பந்தம் போன்றவை காரணமாக திருப்பூர் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மெல்ல மெல்ல எல்லா பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வருகிறது. இதனால் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. ஆனால் திருப்பூரில் அந்த அளவிற்கு வேலைக்கான ஆட்கள் இல்லை.. இதனால் தமிழ்நாடு முழுவதும் வேலை தேடுவோர் பின்னலாடை துறையில் வேலை கிடைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தை அணுகலாம்.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதார மந்தநிலை, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட தொழில் மந்தநிலை சிறிது சிறிதாக மாறி, இன்று திருப்பூருக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கியுள்ளன.
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பெரும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், கொரோனா தொற்றுக்கு முன்னிருந்த நிலையிலுள்ள அளவுக்கான வர்த்தக வாய்ப்புகளை வழங்க தொடங்கியுள்ளன. மேலும், வங்கதேசம் டிசம்பர் 2027 வரை பெற்றுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பு, 2027-க்கு மேல் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலைப்பாட்டில், இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி கட்டமைப்புகளை அமைக்க ஐரோப்பாவில் இருக்கக்கூடிய பெரு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தற்சமயம், திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஆர்டர்களை சிறிது, சிறிதாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பணிகளுக்கான ஆட்களின் தேவை அதிகரித்துள்ளது. டெய்லர்கள், செக்கர்கள், உதவியாளர்கள், நிர்வாகத்துக்கான மெர்ச்சண்டைசிங் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
பெரும் உற்பத்தி நிறுவனங்கள் முன் அனுபவம் இல்லாமல், அனுபவம் மற்றும் திறன் இல்லாதவர்களைகூட வேலைக்கு அமர்த்தி, தங்களது திறன் மேம்பாட்டு மையங்களில் பயிற்சி அளித்து பணி வழங்க தயாராக உள்ளன. வடமாநில தொழிலாளர்களின் வரத்து தேர்தல் காலமானதால் குறைவாகவே உள்ளது. மேலும் இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்று வரும் நிலையும் உள்ளது.
டெய்லர்கள், செக்கர்கள், உதவியாளர்கள், பிரிண்டிங், நிட்டிங், டையிங், காம்பேக்டிங் போன்ற பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளை தேடி வருபவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான வேலையை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை தேடுவோர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அணுகினால், நிச்சயமாக அவர்களுக்கான பணிகள் உறுதி செய்யப்படும். மேலும், நல்ல ஊதியம், தங்குமிடம் மற்றும் உணவு வசதி அளிக்கப்படும்" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பட்சத்தில் இந்தியா முழுவதுமே திருப்பூரின் ஆடைகள்தான் முக்கியமானதாக மாறும். திருப்பூர் இப்போது உள்ளதை விட பல மடங்கு வளரும்.. திருப்பூர் மாநகரம் அடுத்த 10 வருடத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அதிகம் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications