பழனியிலேயே பணி .. 8 முதல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வேலை.. அழைக்கும் ஏபிசிஏசி கல்லூரி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்பட 6 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 முதல் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழனி கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாக இது செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைப்பு பெற்று இயங்கி வரும் நிலையில் வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி தட்டச்சர் பணிக்கு 2 பேர், இளநிலை உதவியாளர் பணிக்கு 4 பேர், ஆய்வக உதவியாளர் பணிக்கு 13 பேர், பதிவறை எழுத்தர் பணிக்கு 3 பேர், நூலக உதவியாளர் பணிக்கு ஒருவர், அலுவலக உதவியாளர் பணிக்கு 3 பேர் என மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தட்டச்சர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தட்டச்சில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்ழிதழ், தொழில்நுட்ப கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல் மற்றும் முன் அனுபவம் இருப்பின் அதற்கான சான்று உள்ளிட்டவற்றுடன் ‛‛செயலர், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்'' என்ற முகவரிக்கு அக்டோபர் மாதம் 9 ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் வெளியாகவில்லை. ஆனால் அரசு விதிகளின்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் சந்தேகம் இருப்பினும் பணி நாட்களில் 04545 - 251 288 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications