குழந்தை நீதி கதைகள்: அம்மா பசிக்குதே ! அப்பா பசிக்குதே !- கரடியின் கதறல்
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க. இந்த தடவை ஒரு கரடிக்குட்டி நமக்கு ஒரு நல்ல பாடம் சொல்லி தர ரெடியா இருக்கு. அது மட்டும் இல்லை நெறைய தேனீக்களும் நம்ம கதையில இருக்கு.
என்னனு பாக்கலாமா? வாங்க.
ஒரு காட்டுல ஒரு கரடிக்குட்டி வாழ்ந்து வந்தது. ஒருநாள் உணவைத்தேடி அது காட்டில் அலைந்துகொண்டு இருந்தது. அந்த பரிதாபமான கரடி நல்ல உணவை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிடித்த காய்கனிகள், கொடிகள், வேர்கள் இதையெல்லாம் நினைத்தாலே நாக்கில் நீர் ஊறிற்று. அது ஒரு அடர்த்தியான காடு. பல உயிரினங்கள் பரவி இருந்தன. தனது பசியை போக்கும் உணவு எப்போது கிடைக்கும் என எண்ணியவாறு திரிந்துக்கொண்டிருந்தது, கரடிக்குட்டி.
சற்றுத் தொலைவில் மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த எதோ ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை நோக்கி கரடிக்குட்டி சென்றுக்கொண்டிருந்தது. அருகில் நெருங்கியது; அது தேன்கூடு தான். பெரும் மகிழ்ச்சியில் கரடி உற்றுப்பார்த்தது. அதனுள் தேனீக்கள் எதுவும் இல்லை. நம்பமுடியாமல் கரடி தன் கண்களை தேய்த்து கொண்டு பார்த்தது. தனது அதிர்ஷடத்தை கரடியால் நம்பமுடியவில்லை. துள்ளிக்குதித்துக்கொண்டது. உறுதி செய்துகொண்ட பின் கூட்டில் இருந்து சிறிது தேன் எடுத்து பருகியது. அமிர்தம் உண்ட நிலையை கரடிக்குட்டி உணர்ந்தது. மேலும் இரண்டு மூன்று முறை பருகி தனது பசியை போக்கிக்கொண்டது. அங்கிருந்து கிளம்ப எண்ணியது.
திடீரென ஆசை பெருக்கெடுத்த நிலையில், கூட்டை எடுத்து சென்றால் தேன் முழுவதையும் சாப்பிட்டு விடலாம் என திட்டம் போட்டது. அதன்படி கூட்டை எடுக்க தனது காலை தூக்கியது.

அப்போது ரீங்காரமிட்டவாறு ஒரு பெரிய தேனீக்கூட்டம் தன்னை நோக்கி வருவதை கண்டு கரடிகுட்டி திகைத்தது. அந்த கூட்டை சேர்ந்த தேனீக்கள் அவை. தேனீக்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக வந்து கொண்டிருந்தன. கூட்டை நெருங்கியபோது கரடி கூட்டை பிரிப்பதை பார்த்தன. அவை சேகரித்த விலைமதிப்பற்ற தேனை கரடிக்குட்டி அபகரிக்க வருவதைக்கண்டு கோபமான தேனீக்கள் கரடியை சூழ்ந்துகொண்டு கொட்ட ஆரம்பித்தன.
தேனீக்கள் கொட்டியதால் கரடிக்கு மிகவும் வலித்தது. வலி தாங்காத கரடிக்கு மிகவும் ஆத்திரம் ஏற்பட்டது. "எனக்கு இல்லாத இந்த கூடு தேனீக்களுக்கு இருக்க கூடாது" என மனதில் சொல்லிக்கொண்டு, வேகமாக கூட்டை பிடிக்க குதித்தது,பிடித்து கூட்டை அழிக்க வேண்டும் என்ற வெறி அதற்கு ஏற்பட்டது. ஆனால் புத்தியுள்ள தேனீக்களுக்கு கரடி என்ன செய்ய முயல்கிறது என்பது தெரிந்தது. ரீங்காரம் செய்தவாறே அவை கரடிக்குட்டியை சுற்றி சுற்றி வந்து தங்கள் வலிமை எல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்குகளினால் கொட்டின. வேகமாக தேனீக்கள் தாக்கியதால் பயந்துபோன கரடிக்குட்டி தனது எண்ணத்தை கைவிட்டு ஓடத்தொடங்கியது.
வலி அதிகமானதால் கரடி வேகமாக ஓடியது. ஆனால் கரடியை தொடர்ந்து கொட்டியவாறு தேனீக்கள் பின்தொடரந்தன. தாங்கள் அரும்பாடு பட்டு சேர்த்த தேனை அழிக்க நினைத்த பேராசை கரடிக்கு பாடம் புகட்ட விரும்பின. வலியால் துடிதுடித்த கரடிக்குட்டி வழியில்லாமல் வேகமாக ஓடி தனக்கு முன்னால் இருந்த ஆற்றில் குதித்தது. தேனீக்கள் கரடி வெளிய வரட்டும் என கோபத்தில் காத்துக்கொண்டிருந்தன. கரடிக்குட்டியோ தண்ணீருக்கு அடியில் மூச்சை அடக்கிக்கொண்டு இருந்தது. மேலும் வலிக்கு தண்ணீரில் இருப்பது இதமாக இருந்தது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த தேனீக்கள் தங்கள் கூட்டை நோக்கி கிளம்பின.
உடலில் பட்ட காயத்துக்கு வருந்தியபடி தண்ணீரைவிட்டு வெளியேறி தனது இடத்திற்கு சென்றது. தனது தவறை நினைத்து கரடிக்குட்டிக்கு அழுகை வந்தது. இனி இனிப்பான தேனை நினைத்தாலே கரடிக்கு கசப்பான அனுபவம் தான்.
குட்டிஸ் எப்படி இருந்துச்சு நம்ம கதை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்லுவாங்கல்ல அதுதான் இது. அதுபோக மத்தவங்க உழைப்பை திருடவும் கூடாது. அது நமக்கு ஆபத்துல தான் முடியும். நீங்களும் உங்க உழைப்பை நம்பி ஒரு வேலையை செய்யுங்க. மத்தவங்க பாதையில குறுக்கிடாதீங்க நமக்கான பாதையில் அமைதியாக பயணிப்போம். ஆசை வெறி அழிவின் படி.












Click it and Unblock the Notifications