சொல்லாதீங்க.. கத்துக் கொடுங்க!
யாரிடமும் வெறுமனே சொல்வதால் பயன் இல்லை.. அவர்கள் மறந்து விடுவார்கள். கற்றுக் கொடுக்கலாம் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.. ஆனால் அவர்களையும் உங்களுடன் அந்த வேலையில் ஈடுபடுத்திப் பாருங்கள்.. அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.. இந்த 3வது ரகம்தான் நமக்கு முக்கியமாக தேவை.
சிறுவயதிலேயே சின்ன சின்ன வேலைகளைப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக காரை நீங்கள் துடைத்தால் உங்கள் பிள்ளைகளையும் அதற்கு உதவ சொல்லுங்கள். ஒரு விஷயத்தை நீ இப்படி செய்திருக்கலாம் என்று கூறுவதை விட அந்த விஷயத்தில் அவர்களை ஈடுபடுத்தி அதை இப்படி செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று அவர்களுக்கு உணர்த்தலாம்.
வீட்டை அலங்கரிப்பதுகூட ஒரு கலை தான். அதை நம் குழந்தைகள் செய்யும் போது அவர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் நாம். இது எப்படி செய்யலாம் என்று அவர்களிடம் கூறுவதை விட அவர்களை செய்யச் சொல்லி அதில் தவறு நேரும்போது அதைத் திருத்துங்கள். ஒரு கணக்கு புதிதாகப் போடும் போது முதலிலேயே சரியான விடை கிடைப்பதில்லை. ஆசிரியரின் வழிகாட்டுதலில் தான் மாணவன் கல்வி பயில்கிறான்.
முன்னோர்களின் வழிகாட்டுதலில் தான் இளைய தலைமுறையினர் வளருகின்றனர். நல்ல வழிகாட்டுதல் இருந்தால் எவரும் தன் வாழ்வில் வெற்றி பெற முடியும். அதனால் எதையும் சொல்லாமல் அவர்களுக்குக் கத்துக் கொடுங்க. நிறைய விஷயங்களை உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் கத்துக் கொடுங்க. அப்புறம் பாருங்க அதனோட மாற்றத்தை.