ஐந்து கரத்தோனே ஆனைமுகத்தோனே வெற்றி விநாயகனே முக்கண்ணனின் மகனே!
சென்னை: ஐந்து கரத்தோனே ஆனைமுகத்தோனே வெற்றி விநாயகனே முக்கண்ணனின் மகனே என்று முழுமுதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பிறந்தநாள் இன்று. இறைவனாகிய விநாயகருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். கொழுக்கட்டை மட்டும் அல்லாது அவருக்கு இன்னொரு இனிப்பும் மிகவும் பிடிக்கும். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா.
Recommended Video
விநாயகருக்கு பால் பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். ஒருநாள் விநாயகப் பெருமான் உலகைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பால் பாயாசம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே கையில் பால் வெல்லம் மற்றும் ஏலக்காயுடன் அருகிலிருந்த கிராமத்திற்கு சிறுவனைப் போல் தன்னை மாற்றிக் கொண்டு சென்றார்.

சிறிது தூரம் நடந்தபின் அவர் கண்ணில் ஒரு வீடு தென்பட்டது. அங்குச் சென்றுக் கதவைத் தட்டினார். ஒரு பணக்காரப் பாட்டி கதவைத் திறந்தார். அவரிடம் அந்த சிறுவன் பாட்டி எனக்குப் பால் பாயாசம் வேண்டும் இதோ அதற்கானப் பொருள்கள் எனக்குச் செய்து தருகிறீர்களா என கேட்டான். அதற்கு அவர் நீ யாரென்றே எனக்குத் தெரியாது உனக்கு நான் பாயாசம் செய்து தருவதா அதெல்லாம் முடியாது என்று கூறி கதவடைத்து வி்ட்டார்.
சிறிது தூரம் சென்ற பின் ஒரு குடிசை ஒன்றைக் கண்டார் விநாயகர். அங்கு சென்ற அவர் அங்கிருந்த பாட்டியிடம் எனக்குப் பாயாசம் சாப்பிட வேண்டும் போல் உள்ளது இதோ அதற்கானப் பொருள்கள் எனக்கு செய்து தருகிறீீர்களா என கேட்டான். உடனே அவர் மகிழ்ச்சியுடன் தாராளமா கண்ணா உனக்கு நான் செய்து தருகிறேன் என்று அவனை உள்ளே அழைத்து பாயாசம் செய்வதற்காக ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்டு வைத்தார்.
அதில் சிறுவன் கொடுத்த பொருள்களை இட்டுப் பாயாசம் தயாரிக்கலானாள் பாட்டி. அப்போது அந்த சிறுவன் என்ன பாட்டி பாத்திரத்தில் பாதி தான் பாயாசம் உள்ளது எனக்கு பாத்திரம் முழுவதும் வேண்டும் என்றான். பாட்டி சிறுவனின் பேச்சைக் கேட்டுச் சிரித்தாள். தான் வெளியே சென்று வருகிறேன் என்று கூறி சிறுவன் வெளியே சென்றான்.
சிறிது நேரத்தில் பாத்திரம் முழுவதும் பாயாசம் நிரம்பியது. அதன் மணம் வீடு முழுவதும் வீசியது. இதைப் பார்த்து அந்த பாட்டி ஆச்சரியப்பட்டாள். அந்த பாயாசத்தின் மணம் அவளைச் சாப்பிடத் தூண்டியது. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ என்று கூறி ஒரு கிண்ணம் பாயாசத்தைக் குடித்து விட்டாள். அதன் சுவையில் தன்னை மறந்த பாட்டி மறுபடியும் ஒரு கிண்ணம் பாயாசம் எடுத்து ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ என்று கூறி குடித்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த சிறுவன் வீட்டிற்கு வந்தான். உடனே பாட்டி வாடா கண்ணா உனக்குப் பாயாசம் தருகிறேன் என்றாள். அதற்கு அவன் வேண்டாம் பாட்டி நான் இரண்டு கிண்ணம் பாயாசம் ஏற்கனவே குடித்து விட்டேன் அதில் என் வயிறு நிரம்பிவிட்டது போதும் பாட்டி என்றான்.
அதற்குப் பாட்டி எப்படி கண்ணா நீ இப்போது தானே வீட்டிற்கு வருகிறாய் என்று கூற சிறுவன் வடிவிலிருந்த விநாயகப் பெருமான் அந்த பாட்டிக்கு காட்சியளித்தார். அதனால் குட்டீஸ் நீங்களும் உங்ககிட்ட யார் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்யுங்க விநாயகரோட அருளைப் பெறுங்கள். உங்கள் வாழ்வில் வளம் செழிக்கட்டும்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications