ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் 20 வீடுகள் இடிந்து சேதம் - 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ரைட்டன்பட்டி, குலாலர் தெரு, ஓட்டமடம், கோட்டைபட்டி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்குள்ளானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எம். நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி , கிருஷ்ணன்கோவில் செண்பகத்தோப்பு வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மொட்டைபத்தான் கண்மாய், பொன்னாங்கன்னி கண்மாய் திருவண்ணாமலை குளம், செங்குளம் கண்மாய் ,வடமலைகுறிச்சி கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையை பகுதிகளான செண்பகத்தோப்பு பேயானாற்று ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2வது முறையாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து உள்ளது. இதனை தொடர்ந்து கோவில் தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி ஜாபர் ஆகியோர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மின் மோட்டார் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றினர்.
தொடர் கன மழை காரணமாக ரைட்டன்பட்டி, குலாலர் தெரு, ஓட்டமடம், கோட்டைபட்டி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். உடனே அதிகாரிகள் சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு உடனே வீட்டை சீரமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமசுப்பிரமணியனிடம் மனு அளித்தனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடாமல் பெய்த கனமழையால் குமரன் தெரு மாடசாமி கோவில் அருகே வீடு இடிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிர் தப்பினர். ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைகுளம்பட்டி, மில் கிருஷ்ணாபுரம், ஆசிரியர் காலனி, இ.எஸ்.ஐ. காலனி, கலங்காப்பேரி, கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையன்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதனால் வாகைகுளம் கண்மாய் நிறைந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.












Click it and Unblock the Notifications