வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
"மேற்கிலிருந்து வீசுவதால்
கிழக்கில் திரள்கின்றன
உதிர்ந்த இலைகள்
இலைகள் மரத்திலிருந்து உதிர்வது இயல்பாக நடக்கும் போது
அது அழகு
பிறப்பும் அப்படித்தான்
இறப்பும் அப்படித்தான்
இயல்பாகப் பூக்கிற போது புன்னகையும் பூவாகி விடுகிறது-
இறப்பு நிறைவாக வேண்டுமானால்
இலைக்கும் மரத்திற்குமான ரத்த சம்மந்தம் முடிந்து போகும் போது
தான் அது சருகாக முடியும்
அப்போது உதிர்கையில் அது கலகலத்துக் கொண்டே
சங்கீத ஓசையுடன் விழுகிறது.
இலையாக இருக்கும் பொழுது எழாத சப்தம்
சருகாக மாறுகையில் நடப்பது
வாழ்ந்து முடிந்த அனுபவத்தின் அடிப்படையில்தான்
இலையாக இருக்கும்போது எடையுடன் இருப்பது-
சருகாகும் போது கனமிழந்து விடுகிறது-
இலை இளமை- சருகு முதுமை
சுமைக்கென்று ஒரு அழகு உண்டு- அது இளமையைக் காட்டிலும் மகத்தானது
சுமையில் நெற்றிச் சுருக்கங்கள் கூடி
வாழ்க்கை எழுதிய வரிகளாய்
கண்களில் கருணை ஊறி
காலம் எழுதிய கவிதையாய்
அழகைக் கூட்டுகிறது
கோவைக் காயாய் இருக்கும் இளமை
கோவைப் பழமாய் மாறுகையில் அழகு ஒளிர்கிறது
காற்று வந்து கழுத்தை நெரிக்கும் போது
சருகுகள் மட்டுமல்ல- இலைகளும் உதிர்ந்து விடுகின்றன
பூக்கள் மட்டுமல்ல- மொட்டுகளும் விழுந்து விடுகின்றன
அடிக்கிற காற்றின் எதிரே - எதிர்த் திக்கில்
அவை திரள்கின்றன
மூச்சுப் பிடித்துக்கொண்டு
கடைசி முறையாய்
இலைகள் காற்றுக்கெதிராய் நடத்தும் போராட்டம் அது
மரத்தில் இருக்கும் போதே அவை போராடிய காரணத்தால் தான்
கிளைகளில் ஒட்டிக்கொண்டிருந்தன.
காற்று அடிக்கிற திசையில் திரள்கிறார்கள் மனிதர்கள்
காற்று அடிக்கிறபோது
மனிதர்கள் ஒட்டிக்கொள்கிறார்கள்
இலைகளோ உதிர்ந்து விடுகின்றன- மனிதர்களிலும் மேம்பட்டவை மரங்கள்
அவை திரள்கின்றன எதிர்த்திசையில்-
மெளனமாக - சப்தமில்லா-வாழ்வின் நொடிகளைத் தொலைத்தும்
இலக்கை இழக்காமல்
"பனி மழை
இன்று மகிழ்ச்சியான நாள்
ஃபுஜி மலை கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
BASHO
மகிழ்ச்சி வரும் போது மலைமட்டுமல்ல: மலைபோன்ற தவறுகளும் கண்ணுக்குத்
தெரியாமல் போகின்றன
வேறுமாதிரியாகச் சொல்ல வேண்டுமென்றால்
மலைபோன்ற தவறுகளைக் கூட மறக்கவும், மன்னிக்கவும் தெரிந்தால் தான்
மகிழ்ச்சி ஏற்படும்
பனிமழை பெய்கிற போது தூரத்திலிருப்பவை எல்லாம் மறைந்து போகின்றன
அதிக அடர்த்தியில் பனிமழை பெய்யும்போது, நமக்கு முன்னே உள்ள தூரம் குறைகிறது
தூரம் என்றால் தொலைவு
தூரம் இடத்திற்கும் பொருந்தும்
காலத்திற்கும் பொருந்தும்
நாம் பார்க்கும் காலத்தின் தூரம் குறையக் குறைய
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் குறைந்து
நிகழ்காலச் சிந்தனையில் மூழ்குகிறோம்
இந்தநொடி முழுவதுமாக சாத்தியமாகிறது
பனி மழை எவ்வளவு அழகு
எவ்வளவு நேர்த்தி
இந்த நொடியிலேயே முற்றிலுமாகக் கரைந்து போக முடியுமென்ற போது-
இந்தக் கணத்திலேயே உச்சகட்ட ஆனந்தத்தை அடையுமென்கிற போது -
நாளை எதற்கு? எதிர்காலமெதற்கு? அடுத்த நொடிக்கு அவசியமென்ன?
மலை என்பது இறந்தகாலம்
ஞாபகம் என்பது இறந்தகாலம்
நினைவுகள் இல்லாததே நிகழ்காலம்
எண்ணங்களற்ற நிலையே நிகழ்காலம்
மலை முன்பு இருந்தது வழிகளுக்கு முன்பே
இப்போது இல்லை- ஏனெனில் பனி மட்டுமே இப்போது உண்மை-
அது மட்டுமே நிகழ்கிறது
நேற்றைய காயங்களுக்காக ஏன் இன்றைய மகிழ்ச்சியைப் போக்கிக் கொள்ள வேண்டும்?
நேற்றைய கவலைகளுக்காக இன்று ஏன்
கண்ணீர் சிந்த வேண்டும்?
மலையைப் பார்த்தால் அதை ஏறமுடியாமல் போன ஏக்கங்கள் நினைவுக்கு வரும்
அதன் சிகரத்திற்குப் போக வேண்டுமென்ற பேராசை கிளம்பும்
அதன் உயரத்தைப் பார்த்து பொறாமை வரும்
நாம் குள்ளமென்ற தாழ்வுமனப்பான்மை கூடத் தோன்றும்
பனிபெய்யும் போது எந்தப் பிரச்சனையுமில்லை-
அதில் நனைவதற்கு எந்தத் தடையுமில்லை-
இதில் யாரும் யாரையும் வெற்றி கொள்வதுமில்லை
ryouia- வினுடைய கவிதை ஒன்று உண்டு
அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை
என்று அது ஆரம்பமாகிறது
அவர்கள் பேசவில்லையென்றால் அது பெரிய விஷயமில்லை
ஒரு வார்த்தை கூட என்று சொன்னால் அதில் பல பொருட்கள் இருக்கின்றன
அவர்கள் புன்னகைக்கக் கூட இல்லை
புருவங்களை உயர்த்திக் கொள்ளவுமில்லை
அவர்களிடம் எந்தச் சலனமுமில்லை என்பது தெரிகிறது
அவர்கள் வழிப்போக்கர்களாக இருந்தால் ஒரு வார்த்தை கூட என்ற அடைமொழி தேவையில்லை
அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்
மிகவும் வேண்டியவர்களாக இருக்க வேண்டும்
ஆர்வம் எழுகிறது: அவர்கள் யாராக இருக்கக் கூடுமென்று பூடகமாகச் சொல்லப்படுகின்றவற்றில் தான் ஆர்வம் அதிகரிக்கின்றது
அடுத்தவரி அதைக் கட்டவிழ்க்கின்றது
வீட்டுக்காரர், விருந்தினர் மற்றும்
என்று இரண்டாவது வரி நீள்கிறது
மற்றும் என்றால் யார் அந்த மூன்றாவது நபர் -
கொஞ்சம் நிதானிக்கிறோம்-
ஆர்வம் கூடுகிறது: ஆவல் அதிகரிக்கின்றது
"அந்த வெள்ளைச் சாமந்திகள்
என்று மூன்றாவது வரி முடிகிறது
" அவர்கள் ஒரு வரி கூடப் பேசவில்லை
வீட்டுக்காரர், விருந்தினர் மற்றும்
அந்த வெள்ளைச் சாமந்திகள்
என்று சேர்த்து வாசியுங்கள்
எவ்வளவு அழகு
மெளனம் ஒரு சாமந்திதான் -
வெள்ளை சாமந்திகள் அழகு!
வெண்மை அமைதியின் சின்னம்-
இருவர் மெளனமாய் அமர்ந்திருக்கும் போது
அவர்களுக்கு இடையே மட்டுமல்ல-
அவர்களே வெண்சாமந்திகளாக மாறிப்போகிறார்கள்-
மணம் வீசுகிறார்கள் என்பதே உண்மை
(தூறல் வரும்)