தமிழகத்தில் இன்று
மே 08, 2000
கண்ணம்மா - என் காதலி - 4
மன்னர் குலத்திடையே பிறந்தவனை -இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறு குழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாத செய்கை செய்தவ ருண்டோ?
வன்னமுகத்திரையைக்களைந்திடென்றேன்-நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரித்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எனக்
கெண்ணப் படுவதில்லையேடி கண்ணம்மா! (1)
கன்னி வயதிலுனைகண்டதில்லையோ?-கன்னங்
கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?
அன்னிய மாகநம் முள் எண்ணுவதில்லை-இரண்
டாவியுமொன் றாகுமெனகொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுதென்னே?-துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வேனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ?-கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்வெள்குமோ? (2)
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர்சொல்லும்-சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங்கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால்-அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? (3)
சாதிக்காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்,
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ-மிக
நெடும் பண்டைக் காலமுதற் நேர்ந்து வந்ததாம்.
போற்றிமி ராமனென முன்புதித்தனை-அங்கு
பொனிதிலைபக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ஙகுழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான் (4)
முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில்மிக வல்லர் காண்,-அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை
இன்னுங் கடைசிவரைஒட்டிருக்குமாம்,-இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே! (5)
Back To Index