கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: முக்கிய தடயம் ஏதும் கிடைக்கவில்லை
மே 21, 2000
குயிலும் மாடும்
காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்து நின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்,
கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே (5)
நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும்,
கீழேயிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுற்க் கேட்பதுவும்,
கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன், நெஞ்சிலனல்
கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன். (10)
கொல்லவாள் வீசல் குறித்தேன். இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சியென
முன்போல் மறைந்து நின்றேன்; மோகப் பழங்கதையைப்
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு, குயிலாங்கே கூறுவதாம்: நந்தியே, (15)
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே! மாடாகக் காட்சி தரும் மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ?
மானிடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை
மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். (20)
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர். ஆரியரே!
நீள முகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும்,
பஞ்சுப் பொதி போல் படர்ந்த திருவடிவும்,
மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்,
வான்த் திடிபோல மா வென் றுறுமுவதும்,(25)
ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக்குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.
பார வடிவும் பயிலு முடவலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத (30)
சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு,
மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்,
சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி (35)
என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ?
சேற்றிலே தாமரையும்; சீழுடைய மீன் வயிற்றில்
போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே (40)
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை.
மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்.
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் (45)
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய்
எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன்
வந்தமது காதில் மதுரவிசை பாடுவேன்;
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன். (50)
(நாளை முடியும்)
Back To Index