கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கே: தி.மு.க. அமைச்சர்கள் நேர்மையானவர்கள் என்ற பெருமை எனக்கே சொந்தம் என்று கருணாநிதி கூறியுள்ளாரே...?
ப: ஆமாம். உண்மை. மற்றவர்களுக்கு அந்த நம்பிக்கை வரவில்லை.
கே: ஜெயலலிதாவை நம்பி இதுவரை யாரும் கெட்டதில்லை என்கிறாரே டி.டி.வி. தினகரன்...?
ப: செல்வகணபதி ...?
கே: ஒவ்வொரு தேர்தல் கட்டத்திலும், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து வரும் நீங்கள், தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியையே கேலியும்,கிண்டலும் செய்வது என்ன நியாயம்...?
ப: வேலைக்கு ஒருவரை அமர்த்தும் உரிமை பெற்ற வாக்காளர்களாகிய நமக்கு, அந்த வேலையை அந்த ஆசாமி செய்யும் விதத்தை விமர்சனம் செய்யும்உரிமையும் உண்டு; வேலையை விட்டு அந்த ஆசாமியை வெளியேற்றுகிற உரிமையும் உண்டு.
கே: சிறந்த கேள்விகளுக்குத் தாங்கள் பணம் வழங்குவதும் ஒரு வகை லஞ்சம்தானே... (வசமாக மாட்டிக் கொண்டீர்கள்.)
ப: லஞ்சம்தான். இந்த வார லஞ்சத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. (லஞ்சம் வாங்கி, வசமாக மாட்டிக் கொண்டீர்களா?)
கே: சந்தன வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் தமிழக அரசுக்கு ரூபாய் 4.54 கோடி செலவாகி உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ள தகவல்பற்றி...?
ப: இந்தப் பணத்தைத் தருவதாகச் சொல்லியிருந்தால், அந்தச் சந்தனப் போராளியே சரண்டர் ஆகியிருப்பார்.
கே: கலர் டி.வி. ஊழல் வழக்கில் செல்வ கணபதிக்கு தண்டனை வழங்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி என்னவாகும்...?
ப: தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 3 மாத காலம் கழித்துத்தான் எம்.பி பதவி பறி போகும்; அந்த மூன்று மாத காலத்திற்குள்அவர் அப்பீல் செய்தால், பதவி பறிப்பு தள்ளிப் போகும்: அப்போது, அவருடைய பதவி பிழைப்பது, அப்பீல் முடிவைப் பொறுத்தது.
கே: ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்காவிட்டால் என்னவாகும்...?
ப: யாரிடம் மோசம் போவது என்று தீர்மானிக்கிற ஜனநாயக உரிமையை நாம் இழந்து விடுவோம்.
கே: காக்காய் என்றவுடன் தங்கள் நினைவுக்கு வருவது...?
ப: குருவி. (சம்பந்தமில்லாமல் யோசித்தே பழக்கமாகி விட்டது.)
கே: உத்திரப்பிரதேச இடைத் தேர்தலில் பா.ஜ.க.,நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது, எதைக் காட்டுகிறது?
ப: தன் வினைத் தன்னைச் சுடும் - என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
கே; வக்ர புத்தி, குரூர புத்தி, கிரிமினல் புத்தி - விளக்கம் கூறவும்?
ப: தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் அணுகு முறைக்கு விளக்கம் தேவையில்லை.
கே: இலங்கைப் பிரச்சனையில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் அணுகுமுறை, தற்போதைய பிரதமர் வாஜ்பாயின் அணுகுமுறை -இரண்டில் எது பெட்டர்...?
ப: ராஜீவ்காந்தியின் அணுகுமுறைதான் மேலானது; இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் பயன் அளித்திருக்கக் கூடியது. வைகோபோன்ற விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து அதை எதிர்த்தார்களே - அதிலிருந்தே தெரியவில்லையா, அதுதான் நல்லஅணுகுமுறை என்று!
கே: தீவிரவாத்தை விட்டு விட்டு அரசிடம் சரணடைந்த 18 பேருக்கு மணிப்பூர் அரசு, போலீஸ் துறையில் வேலை அளித்துள்ளதுபற்றி...?
ப: தீவிரவாதிகளுக்கு, போலீஸில் இருந்து கொண்டே உளவு சொல்ல ஒரு படை தயார்.
கே: மாமூல் வாங்கிக் கொண்டு, கள்ளச் சாராயம் விற்பதை ஊக்குவிக்கும் போலீஸ் அதிகாரியின் படத்தை, போஸ்டர் அடித்து அரசுவிளம்பரப்படுத்தும் என்ற தமிழக அரசின் உத்தரவு சரியா...?
ப: நல்லதுதான்; அப்போதுதான் போலீசாரும் தங்களுக்கு உடந்தையாக இருந்து வந்த அரசியல்வாதிகள் யார் யார் என்பதை பகிரங்கப்படுத்துவார்கள்.
கே: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பா.ம.க. ,ம.தி.மு.க. மீது வழக்கு தொடரப் போவதாக மூப்பனார் கூறியுள்ளது பற்றி...?
ப: தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்காக இங்கே உழைக்கிற அவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது நியாயமே. மூப்பனாரின்எண்ணத்திற்கு நமது பாராட்டுக்கள்.