இந்த வாரம்
மக்களை காக்கும் ராஜ்குமார் படம், கர்நாடகக் கொடி
பெங்களூர்:
பெங்களூரில் பொது மக்கள் தங்கள் வாகனங்களில் கர்நாடகக் கொடியை கட்டிக்கொண்டோ அல்லது டாக்டர் ராஜ்குமாருக்கு ஜே!, அண்ணாஅவருக்குஜே! என்று வாக்கியங்களை எழுதி ஒட்டிக் கொண்டோ தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தப்பி வருகிறார்கள்.
திங்கள்கிழமை காலை ராஜ்குமார் கடத்தல் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. இதைக் கேட்டதும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் கன்னடகொடியைத் தேடிப் பிடித்து தங்கள் வாகனங்களில் தொங்க விட்டனர்.
இன்னும் சிலரோ தங்கள் கம்ப்யூட்டர்களிலிருந்து ராஜ்குமார் படத்தைத் தேடிப்பிடித்து டெளன்லோட் செய்து ஒட்டிக்கொண்டு ஆபத்திலிருந்து தப்பித்தனர்.
இந்த தந்தரத்தால் அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாய்ப்போய்ச் சேர முடிந்தது. கன்னடத் கொடி கிடைக்காதவர்கள் கம்ப்யூட்டர் கலர்பிரிண்டர் மூலம் காகித கொடிகளை தயாரித்து வாகனங்களில் கட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தனர்.
பலர் டாடாசுமோ, மற்றும் ஜீப்புகளில் ராஜ்குமார் புகைப்படத்தை ஒட்டிக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.
பீடி, பீடா, சிகரெட், டீ கடைகளில் டாக்டர் ராஜ்குமாரின் ரசிகர்கள் என்று ஆளுயர போர்டுகளில் எழுதி வைத்து ஆபத்திலிருந்து தப்பித்தனர்.
நகரின் முக்கிய வீதிகளில் உள்ள மிகப்பெரிய கட்டிட உரிமையாளர்களும் ராஜ்குமார் படத்தை தங்கள் கட்டிடத்தின் வாசல்கதவுகளில் ஒட்டி வைத்துஆபத்திலிருந்து தப்பித்தனர்.
கோபால் மீதான வழக்குகள் வாபஸ்:
இதற்கிடையே வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட டாக்டர் ராஜ்குமாரை மீட்க தமிழக-கர்நாடக தூதுவராக நக்கீரன் ஆசிரியர் கோபால்காட்டுக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் மீது கர்நாடக மாநிலம் கொல்லேகால் போலீஸ் நிலையத்தில் 1996 ல் பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாககாவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பதட்டத்தைத் தணிக்க கமிட்டி:
பெங்களூர் நகரில் உருவாகியுள்ள பதட்ட நிலைமையை சமாளிக்க தனி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கமிட்டியில் உள்துறை, போக்குவரத்து அமைச்சர்கள்,தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, போலீஸ் கமிஷனர் ஆகியோர் இக்கமிட்டியின் அங்கத்தினர்களாக இருப்பார்கள்.
மணிக்கு ஒரு தடவை தமிழக முதல்வருடன் கிருஷ்ணா பேச்சு:
நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக முதல்வர் கருணாநிதியைத்தொடர்பு கொண்டு பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த மாநில அரசின்உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் கிருஷ்ணா பேசும்போது, ராஜ்குமாரைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக தான் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் பேசி வருவதாகக் கூறினார்.
கோவில்களில் சிறப்புப் பூஜை:
தொட்டக்காஜனூர் மண்டேஸ்வரர் கோவிலில் வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்ட ராஜ்குமாரின் நலன் வேண்டி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமைசிறப்புப் பூஜை நடத்தினார்கள்.
ராஜ்குமார் பண்ணை வீட்டில் வந்து தங்கிச் செல்லும் நாட்களில் அப்பகுதி மக்களை நேரில் பார்த்தால் அவர்களின் குடும்ப நலம் குறித்துக் கேட்பார்.அப்பகுதியினர் நலனுக்காக அவருடைய சொந்த நிலம் ஐந்து ஏக்கரும், 25 ஆயிரம் ரூபாயும் சமுதாயக் கூடம் கட்டுவதற்காக வழங்கியுள்ளார்.
ஆஞ்சனேயர் பக்தர் ராஜ்குமார்:
கர்நாடக மக்களால் அண்ணாஅவரு என்று அழைக்கப்படும் ராஜ்குமார் தீவிர ஆஞ்சனேய பக்தர். பண்ணை வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்ஆஞ்சனேயர் கோவில் கட்டியுள்ளார். வீட்டின் அருகே பீரேஸ்வர சாமி கோவிலும் ராஜ்குமார் கட்டிக் கொடுத்ததுதான். ராஜ்குமார் கடத்தப்பட்டதால்தாளவாடி, தொட்டக்காஜனூர் பகுதிகளில் சோகமும் கோபமும் பரவியுள்ளது.