திறக்கப்படுமா பெங்களூர் திருவள்ளுவர் சிலை?
பெங்களூர்:
பெங்களூரில் அல்சூர் ஏரிக் கரையில் அமைக்கப்பட்டு சாக்கு மூட்டையால் மூடப்பட்டுக் கிடக்கிறது திருவள்ளுவரின் சிலை. இரண்டே வரிகளில்வாழ்க்கைத் தத்துவத்தை எழுதிய தமிழ்ப்புலவர் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலைக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்க வேண்டாம்.
இந்த சிலையை திறக்க பெங்களூர் தமிழ்ச் சங்கம் நீதிமன்றத்தில் நீண்டாலமாகப் போராடிக் கொண்டிருக்கிறது. இது குறித்த செய்திகள் அவ்வளவாகபத்திரிக்கைகளில் வருவதில்லை. ஆனால். இப்போது திடீரென திருவள்ளுவர் சிலை பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை ஆக்கிரமிததிருக்கிறது.
பெங்களூரில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கைகள் மட்டுமின்றி, ஆங்கில பத்திரிக்கைகள், கன்னட பத்திரிக்கைகள் முழுவதும் இந்த சிலை குறித்து பெரும்விவாதமே நடந்து வருகிறது.
இதற்குக் காரணம் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால்?... என்று கேள்வி கேட்டு வீரப்பன் விதித்த நிபந்தனைகளில் ஒன்று திருவள்ளுவர் சிலையைத்திறக்க வேண்டும் என்பது.
இப்படி ஒரு மாநிலத்தை நிர்பந்தித்து சிலையை திறக்க வைப்பது சரியா, இல்லையா என்று ஒருபக்கம் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. வீரப்பனின்ஆதரவாளர்கள் இதில் என்ன தப்பு என்கிறார்கள், வீரப்பனை எதிர்ப்பவர்கள் ஒரு கொலைகாரன் உதவியோடு தான் திருவள்ளுவர் சிலை திறக்கவேண்டுமா என்கிறார்கள்.
இந்த விவாதத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு இந்த சிலை விவகாரத்தை மட்டும் தனியே பார்ப்போமா!
வள்ளுவருக்கு கார்டன் சிட்டி பெங்களூரில் சிலை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர் சில தமிழர்கள்.
இவர்கள் பெங்களூர் தமிழ்ச் சங்கம் மூலமாக அல்சூர் ஏரியில் தனிமேடை அமைத்து வள்ளுவருக்குச் சிலை அமைக்க அனுமதி தர வேண்டும் என்று மாநிலஅரசையும், மாநகராட்சியையும் கேட்டுக்கொண்டனர்.
அப்போதைய பாரதி நகர் எம்.எல்.ஏ. மைக்கேல் பெர்னான்டஸ் முதல்வர் குண்டுராவை அழைத்து சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தைக்காண்பித்தார்.
மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். அல்சூர் ஏரியில் வள்ளுவர் சிலை அமைத்தால் ஏரியின் எழில் கெடும். சுற்றுப்புறச் சூழல் சீர்கெடும் என்று கருதிஅரசு வேறு இடத்தில் வள்ளுவர் சிலை அமைக்கலாம் என்று கேட்டுக் கொண்டது.
அதன்பிறகு, கங்காதர செட்டி சாலையில் அமைந்துள்ள ஒடுங்கத்தூர் சுவாமிகள் மடத்தை தேர்வு செய்தது தமிழ்ச்சங்கம்.
1986 ம் ஆண்டு வள்ளுவர் சிலை அமைக்க அனுமதி கொடுக்கலாமா? கூடாதா? என்பது குறித்து மாநாகராட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலானோர் வள்ளுவருக்குச் சிலையா என்று ஆவேசமடைந்தனர். கடும் அமளியால் தீர்மானம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
நம்பிக்கையை விடாத தமிழ்ச்சங்கம் மீண்டும் சிலை அமைக்க, அனுமதி பெறும் முயற்சியில் இறங்கியது. தமிழ்ச்சங்கத்தின் அப்போதைய தலைவர் சுப்ரமணியம்தலைமையில் சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்நத சிற்பி மணிநாகப்பாவிடம் சிலைஅமைக்கும் பணியும், சிற்பி மோகனிடம் பீடம் அமைக்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டது.
மிக உயர்ந்த பீடம் ஒன்றில் அமர்ந்த நிலையில் பீடம் அமைக்க தீர்மானித்தனர் தமிழ்சங்கத்தினர். அதன் அடுத்த கட்ட முயற்சியாக நிதிவசூலில் இறங்கினர்.
இதற்கிடையே, அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் மீண்டும் தலைதூக்கியது. மாநகராட்சி மீண்டும், மீண்டும் எதிர்ப்புக் குரல் காட்டவே அனுமதி பெற்றுசிலை அமைப்பு என்பது குதிரைக்கொம்பு விஷயமாகி விட்டது.
வள்ளுவர் சிலை அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானதாகும். இதை வேறு ஒருவருக்குக் குத்தகைக்குக்கொடுக்க வேண்டுமென்றால் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும். பின்னர் மாநகராட்சி அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்என்று பல வரைமுறைகள் உள்ளதாக மாநகராட்சியினர் கூறினர்.
ஆனால், மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வராமலேயே 11 மாதக் குத்தகை வழங்க கமிஷ்னருக்கு அதிகாரம் உண்டு. குத்தகைக் காலம்முடியும்போது வேண்டுமானால் நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரலாம் என்று கூறி மாநகராட்சிக் கமிஷனர் அனுமதி வழங்கினார்.
கற்களும் முட்களும் நிறைந்து கிடந்த பாதையைக் கடந்த தமிழ்ச்சங்கத்தினர் ஒரு வழியாக அனுமதி பெற்று சிலை அமைக்கும் பணியில் தீவிரமாகஇறங்கினர். கம்பீரமான வள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டது.
1991ல் செப்டம்பர் முதல் தேதியன்று திருவள்ளுவர் சிலை திறப்பதென்று நாள் குறித்து, அப்போதைய முதல்வர் பங்காரப்பா திறப்புவிழாவில் கலந்துகொள்வார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் கடைசி நிமிடத்தில் பிரச்சனை பூதாகரமானது. சிலை திறக்க தடை விதிக்கக் கோரி கோர்ட்டுக்குச் சென்றது கன்னட புலிகேசி சங்கம். தடைஉத்தரவையும் பெற்றது.
தொடர்ந்து அனுமதி வழங்கிய மாநகராட்சிக் கமிஷனரைக் கண்டித்து கன்னட சக்தி கேந்திரா உள்ளிட்ட கன்னட அமைப்புக்களின் தீவிர போராட்டம்நடத்தின. தேசியம் பேசும் பா.ஜ., ஜனதா தளம் கட்சியினர் அனுமதியை ரத்து செய்து தீர்மானமானம் கொண்டு வந்தனர். இவ்வாறு போராட்டம்தீவிரமடைந்ததை அடுத்து அனுமதி ரத்து செய்யப்பட்டது.
தமிழ்ச்சங்கம் கோர்ட்டுக்குச் சென்றது. ஆனால் 9 ஆண்டுகளாக மூடிக்கிடந்த வள்ளுவர் சிலையைத் திறக்க ஒப்புக் கொண்டுள்ளார் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா.
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் பெங்களூரில் உள்ள வள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளான்வீரப்பன்.
பெங்களூரில் தமிழ்ப்புலவர் வள்ளுவர் சிலை, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாக்களை ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்று இரு மாநிலமுதல்வர்களும் வீரப்பனுக்குத் தெரிவித்துள்ளனர்.