ஜெ.வுக்கு என்ன பதில் ... 29-ல் மூப்பனார் முடிவு
சென்னை:
த.மா.கா. வின் கூட்டணி ஆட்சித் திட்டத்திற்கு மூப்பனார் முன்னிலையிலேயே முற்றுப்புள்ளி வைத்து விட்ட ஜெயலலிதாவின் திட்டவட்டமான பேச்சுகுறித்து 29ல் சிதம்பரத்தில் கூடும் த.மா.கா செயற்குழு விவாதித்து முடிவெடுக்கிறது.
ஜெயலலிதாவின் வழக்குகளையும், அ.தி.மு.க.வின் பலவீனத்தையும் காரணமாக வைத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு ஜெயலலிதாவைசம்மதிக்க வைக்க வேண்டும் என்பது தான் த.மா.கா.வின் தேர்தல் வியூகம்.
ஊழல் வழக்குகளால் சூழப்பட்டுள்ள ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி வாக்குகள் கேட்டால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்குப்பதிலாக கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் மக்கள் மாற்றத்தை விரும்பக் கூடும் என்று த.மா.கா அதற்கு விளக்கம் சொன்னது.
அந்த விளக்கத்தையும் கோரிக்கையையும் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா நிராகரித்து வந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயக்கம்காட்டினார். அதை உணர்ந்திருந்த த.மா.கா தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமை காட்டி வந்தது.
இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக ""ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் கூட்டணியை சீர் குலைக்கும் விஷயம். தமிழகமக்கள் இதை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஜெயலலிதா திடுதிப்பென்று, அதுவும் மூப்பனார் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள்முன்னிலையில் பேசி விட்டுப் போனதில் இருந்து ஒட்டுமொத்த கூட்டணியே கலகலத்துப் போய் உள்ளது.
அதிலும் த.மா.கா வட்டாரம் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளான நிலையில் இருக்கிறது. ஆனாலும், இப்பிரச்னை குறித்து உடனடியாக கருத்து சொல்லிதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வாங்கிக் கட்டிக் கொண்டதை போல் பிரச்னை சிக்கலாகி விடும் என த.மா.கா கருதுகிறது.
இப்பிரச்னையில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்னதாக தமது கட்சியினருடனும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சித் தலைவர்களுடனும் கலந்துபேசவும் மூப்பனார் முடிவு செய்துள்ளார்.
அதன் முதல் கட்டமாக த.மா.கா.வின் செயற்குழு 29ம் தேதி சிதம்பரத்தில் கூடுகிறது. இக்கூட்டத்தில் "த.மா.கா.வின் கூட்டணி ஆட்சிகோரிக்கையும்; அ.தி.மு.க.வின் நிராகரிப்பும் பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று மூப்பனார் சென்னையில் வியாழக் கிழமை தெரிவித்தார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா, கூட்டணி ஆட்சி கோஷம் மக்கள் மத்தியில் எடுபடாது என்றுமூப்பனார், நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட்), வரதராஜன் (மார்க்சிஸ்ட்), அப்துல் லத்தீப் (தேசிய லீக்) உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பேசிபரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதாவின் இந்த பகிரங்க அறிவிப்பு பற்றி அதே நிகழ்ச்சியில் மூப்பனாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். மறுத்து விட்ட மூப்பனார் நாளைசொல்கிறேன் என்று கூறி விட்டு நழுவினார்.
ஆனால், செய்தியாளர்கள் விடாமல் வியாழக் கிழமை காலை சத்தியமூர்த்தி பவனில் குவிந்தனர். பகல் 12 மணிக்கு மேல் தான் மூப்பனார் வந்தார்.ஆனாலும் விடாமல் அவரை சந்தித்து இதுபற்றி கேட்டனர். அப்போது அவர் அளித்த பேட்டி:
கேள்வி: கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஏற்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி...?
பதில்: அந்தம்மாவுக்கும் கருத்து கூற ஜனநாயகத்தில் உரிமை உள்ளது. என்னைப் பொருத்தவரையில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும்.
கேள்வி: உங்கள் முன்னிலையில் அப்படி கூறியுள்ளது பற்றி...?
பதில்: அந்த மேடையில் நான் மட்டுமல்ல, எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களும் இருந்தனர். அவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்என்று பார்ப்போம்.
கேள்வி: அப்படியென்றால் அவர்கள் எல்லாம் வேறு கருத்து கொண்டிருக்கிறார்களா?
பதில்: நாங்கள் எல்லோரும் மதசார்பற்ற அணியில் ஒன்றாக இருக்கிறோம்.
கேள்வி: ஜெயலலிதாவின் இந்த திட்டவட்ட முடிவு குறித்து எப்போது பதில் சொல்வீர்கள்?
பதில்: 29ம் தேதி சிதம்பரத்தில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் பதில் சொல்கிறேன்.
கேள்வி: இதனால் அ.தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பு வருமா? அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பீர்களா?
பதில்: கூட்டணியெல்லாம் தேர்தல் நேரத்தில் தான். இப்போது நாங்கள் எல்லோரும் மதச்சார்பற்ற அணியில் இருக்கிறோம். யாரெல்லாம் பா.ஜ.கபக்கம் போகிறார்களோ அவர்களுடன் நான் இருக்க மாட்டேன் என்றார்.
முன்னதாக மூப்பனாரை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தி.மு.க. தலைவர் வீரமணி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ஜெகவீரபாண்டியன், ஐக்கியகம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டவர்கள் சந்தித்து இப்பிரச்னை பற்றி பேசினர்.












Click it and Unblock the Notifications