பாக்.கை அடக்க அமெரிக்கா உதவ வாஜ்பாய் அழைப்பு
வாஷிங்டன்:
பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட அமெரிக்காவின் ஆதரவும், உதவியும் தேவை என்று பிரதமர் வாஜ்பாய்தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் வியாழக்கிழமை உரையாற்றினார். அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் சுமார் 20 நிமிடம் பேசினார்.
வாஜ்பாயின் உரை விவரம் வருமாறு:
இந்தியாவின் அண்டை நாடு ஒன்று உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக விளங்குகிறது. அத்தகைய மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாதனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்து வருகிறது.
இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் பயங்கரவாதத்தின் பிடியில் உள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியாவும் அமெரிக்காவும்கடுமையாகப் போராடி வருகின்றன.
பயங்கரவாதம் அடியோடு ஒழியவேண்டுமானால் இரு நாடுகளின் நடவடிக்கைகளும் இரு மடங்காக அதிகரிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்.
அணு ஆயுதம் தயாரிப்பது மற்றும் பரிசோதிப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான்.ஆனால், அது தேவையில்லாதது என்பதுதான் எனது கருத்து.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கருத்து அந் நாட்டு அதிகாரிகளுக்கு சரியாகத் தோன்றினால், அணு ஆயுதம் தொடர்பாக இந்தியாகொண்டுள்ள கருத்து எங்களுக்கு சரியாகத்தான் தோன்றுகிறது.
மிகப்பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையே செயல்படவேண்டிய சூழ்நிலையில் இந்தியா இருப்பதை அமெரிக்க முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
அணு ஆயுதம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடால் இரு தரப்பு உறவு எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான்எனது விருப்பம்.
அதே நேரத்தில் அணு ஆயுதம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்களில் சிக்கல் ஏற்படுத்த இந்தியா விரும்பவில்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அணு ஆயுத ஒழிப்பில் இரு நாடுகளும் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளன என்பதை நான் அறிவேன்.
பயங்கரவாதத் தடுப்பு மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் இரு நாடுகளும் இணைந்து கடுமையாகப் போராட வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, இருநாடுகளும் தங்களது நல்லுறவையும், செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உலகில் உள்ள நாடுகளில் இந்தியாவைப் போல் வேறு எந்த நாடும் பக்கத்தில் ஒரு பயங்கரமான பயங்கரவாத நாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதைஅமெரிக்கா மட்டுமல்ல மற்ற உலக நாடுகளும் புரிந்து கொள்ளவேண்டும்.
வெளியில் இருந்து செயல்படும் அந்த பயங்கரவாத சக்தி இந்தியாவின் உள்நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கிறது. பல இன மக்கள், பல மொழிபேசும் மக்கள் ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதை உலகுக்குக் காட்டும் நோக்கில் அந்த சக்தி செயல்படுகிறது.
ஆனால், அந்த சக்தியின் முயற்சிக்குத் தோல்விதான் கிட்டும். இந்தியாவை யாராலும் சிதைக்க முடியாது என்பதை இங்கு நான் திட்டவட்டமாகக்தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்தை நாம் எதிர்ப்பதில் தோல்வியடைந்துவிட்டால் சொல்லமுடியாத பிரச்சினையில் நாம் சிக்கிக் கொள்ள நேரிடும். ஆகவே, இந்தியாவும்,அமெரிக்காவும் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டும்.
இந்தியாவைப் போல் பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடு உலகில் வேறு ஏதும் இல்லை. வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளால்பஞ்சாப்பில் மட்டும் 21 ஆயிரம் பேரும் ஜம்மு-காஷ்மீரில் 16 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் நடத்தி வரும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாமிய புனிதப் போர் என்று பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்தெரிவித்துள்ளார்.
அது உண்மைதான். இஸ்லாமிய புனிதப் போர் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் பயங்கவாதநடவடிக்கைகள் மேற்கொள்வதை அவர்கள் கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.
அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது முழுமையான பலத்தைப் பயன்படுத்தி வலுவான நல்ல எதிர்காலத்தை உருவாக்கவேண்டும். அதற்கு ஏற்ப இருநாடுகளும் தங்களது உறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் முழு மூச்சில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற அளவில் பொருளாதாரவளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவும், அமெரிக்காவும் உலக வரைபடத்தில் எதிர் எதிர் திசையில் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மற்றும்பொருளாதார உறவுகளால் இரு நாடுகளும் மிகவும் நெருங்கிவிட்டன என்பதுதான் உண்மை.
தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு முக்கிய பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு இந்தியாவுக்கும்உள்ளது. இத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது சிறப்பானது.
இரு நாடுகளில் அளவுக்கு அதிகமாக வளங்கள் உள்ளன. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது என்பதை அறிந்துநாம் பெருமைப்படவேண்டும்.
இரு நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் அதே நேரத்தில் இந்த நூற்றாண்டில் உலகப் பொருளாதாரமும்மேம்படும் வகையில் தங்களால் முயன்ற உதவியைச் செய்யவேண்டும். அதற்கான திறமையும், வாய்ப்பும், தகுதியும் இரு நாடுகளுக்கும் உள்ளன.
உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வறுமை, எழுத்தறிவின்மை, உணவுப் பஞ்சம், நோய், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை எதிர்த்துப்போராடவேண்டும்.
வடக்குக்கும், தெற்குக்கும் அமெரிக்காவும், இந்தியாவும் பாலமாக விளங்கவேண்டும். அது உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பகுதிபேருக்கு நல்ல வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்தித் தரமுடியும்.
ஆனால், அது முடியாமல் போனால் அந்த இரண்டு பகுதி மக்களும் வறுமையில் வாடுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும். ஆகவே,இப்பிரச்சினையைப் போக்க உலக நாடுகளின் வளர்ச்சி குறித்த முழுமையான உலகளாவிய பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.
அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் செய்து தர இந்தியா தயாராக உள்ளது. அந்த பேச்சுவார்த்தையை டெல்லியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.
சமீப காலமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு வலுப்பெற்று வருவதற்கு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மேற்கொண்டமுயற்சிகளும், அவரது தலைமையும்தான் காரணம். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அளித்த ஆதரவுக்கும்,ஒத்துழைப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
ஜனநாயகம், பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சர்வதேச அமைதி ஆகியவை பற்றி பேச்சுநடந்தவும் எந்த நாட்டுடனும் இணைந்து செயல்படவும் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்றார் வாஜ்பாய்.
முன்னதாக வாஜ்பாய் தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மத சடங்குகள் செய்யப்பட்டன. இந்து மத குருமார்கள்வேதங்கள் ஓதினர். அதன் பிறகு வாஜ்பாய் தனது பேச்சைத் தொடங்கினார். இத்தகைய நடைமுறை அமெரிக்க கூட்டுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டஇதுவே முதன் முறை. ஐ.ஏ.என்.எஸ்.