இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...
சென்னை:
ஜெயலலிதாவை திட்டித் தீர்த்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் திடீர் பல்டி அடித்து தானும் வழக்கமான அரசியல் தலைவர் என்பதைநிரூபித்துள்ளார்.
ஜெயலலிதா தலைமையில் நடக்கும் பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஜெயலலிதாவை ஐஸ் மழையில் குளிபாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 23 ம் தேதி சென்னை தியாகராயநகர் பனகல் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
வரலாற்றை உருவாக்கிய வைக்கம் வீரர், சுயமரியாதை உணர்வைத் தூண்டிய தன்மானச் சிங்கம், மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மனிதனுக்குப்பகுத்தறிவைப் புகட்டியவர் பெரியார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேரூன்றுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த பெரியாருக்கு பச்சைத் தமிழர் காமராஜரின் பொற்கால ஆட்சியின் வெற்றியில்கணிசமான பங்கு உண்டு.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை சட்டசபையில் நிறைவேற்றியதோடு, இந்திய அரசியல்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 9 வது அட்டவணையில் இடம்பெற பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இதன் மூலம் பெரியாரின் கொள்கைக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா என்பது தெளிவாகப் புரியும்.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கலந்து கொள்ளும் இவ்விழாவில், சோனியா காந்தியின் பிரதிநிதியாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் மற்றும் சர்வகட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தோழர்கள் மூவர்ணக் கொடியேந்தி, கொள்கை முழக்கமிட்டு, பெரியார் புகழ் பாடி அலைகடலென அணி திரண்டு வரவேண்டுமென்று அன்புடன் அழைக்கிறேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவன்.
ஜெயலலிதா- இளங்கோவன் விமர்சன அறிக்கைகள்:
சமீபகாலம்வரை இளங்கோவன், ஜெயலலிதாவை சிறுபிள்ளைத்தனமானவர் என்று விமர்சித்து வந்தார்.
இதையடுத்து அதிமுகவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே அவ்வப்போது பூசல்கள் ஏற்பட்டன.
அதிமுக அவைத்தலைவர் காளிமுத்துவும், இளங்கோவனும் மாறி, மாறி விமர்சித்துக் கொண்டார்கள்.
கடந்த வாரம் கூட காளிமுத்து ஒரு சூடான அறிக்கை விட்டார். அதில் கூறப்படிருந்ததாவது:
சின்ன புத்தி படைத்தவர் இளங்கோவன். குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் பதவி கனம் அவரை பிடித்து ஆட்டுகிறது.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தரங்கெட்ட நாகரீகமில்லாத நாவடக்கமற்ற ஒருவர் மாநிலத் தலைவராக இருப்பது வெட்கக்கேடு. இனிமேல்இளங்கோவன் வாயை பெவிக்கால் போட்டு ஒட்டினால்தான் தமிழகத்தில் மிச்சம் இருக்கின்ற காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று அன்பாகவிமர்சித்திருந்தார்.
இளங்கோவன் விமர்சனம்:
இளங்கோவனும் சும்மா இல்லை. பதிலுக்கு பதில் அறிக்கை விட்டு வந்தார். ஜெயலலிதா குறித்து விமர்சித்ததற்காக, இளங்கோவனின் தாய்சுலோச்சனா சம்பத்தை விட்டே அவரைக் கண்டிக்கும்படிக் கூறியது அதிமுக.
அது குறித்து கருத்துத் தெரிவித்த, இளங்கோவன் தாயை விட்டும், நாயை விட்டும் என்னைச் சீண்டுகிறார்கள் என்று விமர்சித்தார்.
ஆனால், அரசியல் அந்தர் பல்டி அடித்துள்ள இளங்கோவன் இப்போது ஜெயலலிதா தலைமையில் நடக்கும் பெரியார் விழாவிற்கு காங்கிரஸ் தொண்டர்கள்திரண்டு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
உங்களுக்கு அரசியல் புரியுதா?