சத்துணவு அரிசியைக் கடத்திய 8 பேர் கைது
சென்னை:
தமிழக அரசு மதிய உணவு மையங்களுக்கு வழங்கிய அரிசி, பருப்பு மற்றும் பாமோலினைக் கொண்டு செல்ல வேண்டிய மையங்களுக்கு எடுத்துச்செல்லாமல் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்ற 8 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற அரிசி, பருப்பு, பாமோலின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் டிஜிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் தனிப்படை ஒன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தது.அப்போது, இரண்டு லாரிகளில் மாநில அரசு சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கும் உணவுப் பொருட்களைக் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
4900 கிலோ அரிசி, 970 கிலோ பருப்பு மற்றும் 65 கிலோ பாமோலின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை-மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில்இந்த லாரிகள் பிடிபட்டன.
உடனடியாக, அங்கிருந்து தப்ப முயன்ற 3 பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் போலீஸார் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். இருவரும்சோழாவரத்திலுள்ள தமிழக உணவு விநியோகக் கழக கோடவுனில் பில் கிளார்க்குகளாக வேலை செய்து வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியிலுள்ள பல மையங்களுக்கு விநியோகிப்பதற்காக உணவுப் பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டுசென்றனர்.
அப்போது அவற்றைக் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர் என்பதும் தெரிய வந்தது. இக்கடத்தல்சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.