ம.தி.மு.க. தனித்துப் போட்டி: வைகோ அறிவிப்பு
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும், பாரதீய ஜனதாக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தவிர பிறதொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது.
மதிமுக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக திமுகவுக்கும், அக்கட்சிக்கும் இடையே பிணக்கம்ஏற்பட்டது. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறி அறிக்கை விட்டனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், திமுக தலைவர் கருணாநிதி, இனிமேல் மதிமுகவுக்கு திமுககூட்டணியில் இடமில்லை. தனியாகப் போட்டியிட விரும்பினால் அவர்கள் செய்து கொள்ளலாம். இருகட்சிகளுக்கும் இனி உறவு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையடுத்து தனது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, தென் மாவட்டங்களில்சுற்றுப்பயணம் செய்து வந்த கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ, அதை ரத்து செய்து விட்டு அவசரம், அவசரமாகசனிக்கிழமை சென்னை வந்தார்.
பிற்பகலில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இரவுவரை நீடித்த இந்த ஆலோசனையின் இறுதியில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது:
1998-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தோடு, அக்கட்சி தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம். தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன், திமுகஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். இதைநாங்கள்தான் பகிரங்கமாக எதிர்த்தோம். கூட்டணியை விட்டும் வெளியேறினோம்.
99-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தது. பின்னர் நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது. நாங்களும் தமிழகத்தில் திமுக கூட்டணியில்சேர்ந்தோம்.
வருகிறது சட்டசபைத் தேர்தலில் கலைஞர் அரசு மீண்டும் வர வேண்டும் என்பதற்காக ஜனவரி 26ம் தேதி முதல்மார்ச் 17-ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாநாடு நடத்தினோம். இதய சுத்தியோடு இந்தமாநாடுகளை நடத்தினோம். திமுக கூட இவ்வாறு செய்யவில்லை. நாங்கள் செய்தோம்.
தொகுதிப் பங்கீடு வந்தபோது, 43 தொகுதிகள் தேவை என்றோம். 12 இடம்தான் தர முடியும் என்றார்கள். பிறகு 30இடங்கள் கேட்டோம். 21 தருகிறோம் என்றார்கள். 21 தொகுதியும் நாங்கள் விரும்புகிற தொகுதியாக இருந்தால்ஏற்றுக் கொள்கிறோம் என்றோம். சரி என்ற பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டோம்.
ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார்கள். இதையும் கூட ஆர்க்காடுவீராசாமி பத்திரிகைகள் மூலம் அறிக்கையாகக் கொடுத்தார்.
ஆர்க்காடு அறிக்கைக்குப் பதில் தரும் விதத்தில்தான் நாங்களும் அறிக்கை விட்டோம். கூட்டணிக்குக் குந்தகம்விளைவிக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை. அறிக்கைப் போருக்கு மதிமுக தயாரில்லை.
பொய் சொல்கிறோம், தனியாகப் போனால் போகட்டும், 30 இடங்களைக் கேட்கக் கூட தெம்பு இல்லாதவர்கள்என்றெல்லாம் அவர்கள் கூறிய பிறகு எப்படி அணியில் நீடிக்க முடியும்? கூட்டணியில் இருந்து நாங்கள்திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம்.
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்ற கொள்கைகளோடு மதிமுக செயல்படும்.நாங்கள் மக்களை சந்திப்போம். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அவர்களிடத்தில் சொல்வோம்.
பாரதீய ஜனதாக் கட்சியுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது. இதை பிரதமர் வாஜ்பாயிடத்தில் பேசுகையில்விளக்கினேன். அதற்கு மேல் பேசியவற்றை இப்போது வெளியிட முடியாது.
சோதனையான நேரத்திலும், வெற்றி பெற்ற நேரத்திலும் வாஜ்பாய்க்குத் துணையாக நாங்கள் இருந்திருக்கிறோம்.அந்த உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
எங்களின் எதிரி திமுகவா, அதிமுகவா என்று கூற விரும்பவில்லை. எங்களைத் தேர்ந்தெடுங்கள் என்றுதான்மக்களிடம் கேட்கப் போகிறோம்.
நாங்கள் அதிமுக அணிக்குச் செல்வதற்கு 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை, ஒரு சதவீதம் குறைவாகவும் வாய்ப்புஇல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் எங்களைத் தள்ளி விட்டு விட்டார்கள். இதற்குநான் காரணம் இல்லை.
மதிமுகவின் 2 மத்திய மந்திரிகளும் அமைச்சரவையில் நீடிப்பார்கள். அவர்கள் இருப்பது தேசிய ஜனநாயகக்கூட்டணியில், திமுக கூட்டணியில் அல்ல. எங்களுக்குப் பிறகுதான் திமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தது.நான் திமுக கூட்டணியில் சேரவில்லை. அவர்கள்தான் நான் இருக்கும் கூட்டணியில் சேர்ந்தார்கள்.
மதிமுக சுயுமரியாதை உள்ள இயக்கம். வா என்றால் வருவதற்கும், போ என்றால் போவதற்கும் நாங்கள்எடுபிடிகள் அல்ல. மீண்டும் திமுக சார்பில் அழைப்பு வந்தால் பேச மாட்டோம். முடிவு என்றால் முடிவுதான்.
நாங்கள் அமைத்திருப்பது 3-வது அணி அல்ல. மாற்று அணி. அன்று (1993-ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது)கொலைப்பழி சுமத்தி என்னை வெளியேற்றினார்கள். இப்போது பொய் பழி கூறி வெளியேற்றியிருக்கிறார்கள்என்றார் வைகோ.
முன்னதாக, வைகோ பேட்டி தந்து கொண்டிருக்கும்போது கட்சி அலுவலகமான தாயகத்திற்கு வெளியேகூடியிருந்த தொண்டர்கள் சிலர் கருணாநிதியின் கொடும்பாவியைக் கொளுத்தினார்கள். கருணாநிதியை ஆட்சிக்குவர விட மாட்டோம் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
தாயகத்திற்கு வெளியே இரவு நேரத்திலும் தொண்டர்கள் ஏராளமான அளவில் குழுமியிருந்தனர். கருணாநிதியால்தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். நாம் திமுக கூட்டணியில்சேர்ந்திருக்கவே கூடாது என்று அவர்கள் குமுறிக் கொண்டிருந்தனர்.