புதுவை முதல்வர் யார்? சோனியா முடிவு செய்வார்
சென்னை:
பாண்டிச்சேரி மாநில முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்ஒப்படைக்க அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
பாண்டிச்சேரியில் ஆட்சியமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. அதிமுக ஆதரவுடன்ஆட்சியமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் முதல்வர்தான் இன்னும் ரெடியாகவில்லை.
தற்போதைய முதல்வர் சண்முகம், முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி மற்றும் முதல்வர் பதவிக்கு முன்பு போட்டியிட்டுத் தோற்ற அமைச்சர் ரங்கசாமி ஆகியோர்முட்டி மோதுகின்றனர்.
முதல்வரை ஒருமனதாகத் தேர்வு செய்யும் பொருட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பார்வையாளர்களாக குலாம் நபி ஆசாத் மற்றும் மோதிலால் வோரா ஆகியோர் புதுவை வந்துள்ளனர்.
வியாழக்கிழமை முழுவதும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியாகஇருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை கட்சித் தலைவர் சோனியாகாந்தியிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் முன்மொழிந்தார். அமைச்சர் ரங்கசாமி வழி மொழிந்தார்.
இந்தத் தகவல்களை குலாம் நபி ஆசாத் வெள்ளிக்கிழமை புதுவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதையடுத்து புதுவை முதல்வரைத் தேர்வு செய்வது மேலும் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.