ஆட்சிக் கலைப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
டெல்லி:
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, காவல் துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்கும், மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டதற்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
356 வது பிரிவு:
அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா எனவும் மத்திய அரசுஆலோசித்து வருகிறது. திங்கள்கிழமை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் இதற்கு ஆதரவுதெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் தெலுங்கு தேசம் கட்சி இதற்குக் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. தலைவர்கள் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தங்களது கூட்டணி கட்சித் தலைவர்கள்பலரையும் சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என மத்தியஅரசு முடிவெடுத்தால், ராஜ்யசபாவில் அதை எதிர்த்துதங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறார்கள்.
தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.பொன்னையன், மற்றும் ராஜ்ய சபா எம்.பிக்கள் அடங்கியஅ.தி.மு.க. பிரதிநிதிகள் குழு மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் ஆகியோரைதிங்கள்கிழமை சந்தித்தது. கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவங்கள் பற்றி எடுத்துக்கூறிய அந்தக் குழு, தங்கள் பக்க நியாயத்தையும் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பிரதிநிதி குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயபால்ரெட்டியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனையும் சந்தித்துப் பேசினர். மேலும், அவர்கள்குலாம் நபி ஆசாத்தையும், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளனர்.
இவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடும் முன் உள்துறை அமைச்சர் அத்வானியுடன்பேசுவதற்காக, நேரம் ஒதுக்கி தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. பிரதிநிதி குழுவினரை சந்தித்த பின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
தமிழகத்தின் நிலையைக் கண்டறிய சென்னை சென்ற மத்திய அரசின் குழு, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழு எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கு ஜனாதிபதிஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுவதே வழக்கமாகி விட்டது.
முன்னர் இதுபோல்தான், பீகாரிலும், மேற்கு வங்காளத்திலும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என கூறியது.
மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு தெரிந்தது ஒரே அரசியல் சட்டப்பிரிவுதான். அது அரசியல் சட்டம் 356வது பிரிவுதான். இதுதவிர வேறு ஒன்றுமே அவருக்கு தெரியாது என்றார் ஜெய்பால் ரெட்டி.
செவ்வாய்க்கிழமை மாலை கூடும் மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில், அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை அமல்படுத்திதமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலமா என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
இது குறித்து ஆலோசனை செய்ய லண்டன் சென்றிருந்த மத்திய அரசின் தலைமை நீதிபதி (அட்டர்னி ஜெனரல்) சோலி சுராப்ஜியும்அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டு, அவரும் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சருடன் ஆலோசனையில்பங்கேற்கவுள்ளார்.