நாடு முழுவதும் "கார்கில் வெற்றி" கொண்டாட்டங்கள்
டெல்லி:
கார்கில் போரில் வெற்றி பெற்றதையொட்டி, கார்கில் வெற்றியின் 2ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன.
ஆனால், ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவினால், அவர் இந்தக்கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
கார்கில் போரில் உயிர் நீத்த 527 ராணுவ வீரர்களுக்கும் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்தியாகேட்டில், நூற்றக்கணக்கான குழந்தைகள் தீபங்களேற்றி அணிவகுத்து நிற்க, பிரதமர் வாஜ்பாய் போர்நினைவகத்தில் தீபமேற்றி வைக்கிறார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கார்கில் உயிர்நீத்தவர்களின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்.
நாட்டின் பிற பகுதிகளிலும், கார்கில் வெற்றி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன.
அனைத்து மாநிலங்களிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இந்தப் போரினால் உடல்ஊனமுற்றவர்களுக்கு நிதி உதவி செய்தும், கார்கில் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.