2வது கட்ட தேர்தலில் பெரிய அசம்பாவிதங்கள் இல்லை என்கிறார் உள்துறை செயலாளர்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பெரிய அசம்பாவிதங்கள் எதுவும்நடைபெறவில்லை என்று உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் கூறியுள்ளனர்.ஆனால் சேலம், ராமநாதபுரம், கமுதி மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு போன்ற கலவரங்கள்நடந்துள்ளன.
இதுகுறித்து உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா நிருபர்களிடம் கூறுகையில்,
தர்மபுரி மாவட்டம் ஹரூரில் வன்னியர்களுக்கும், தலித்களுக்கும் இடையே நடந்த கோஷ்டி மோதலில் குடிசைகள்தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இருப்பினும் போலீசார் அங்கு சென்று இருதரப்பினயுைம் கைது செய்து,நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் சென்னை அருகே ஆலந்தூரில் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஒரு கும்பல் கள்ள ஓட்டுப்போடுவதாகப் புகார்கள் வந்தததை அடுத்து, அந்தப்பகுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.
மொத்தத்தில் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.
இதேபோல தமிழக போலீஸ் டி.ஜி.பி. நெய்ல்வால் கூறுகையில்,
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு, 2 இடங்களில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு, 9 இடங்களில் சாலைமறியல், 6 இடங்களில் தாக்குதல் சம்பவங்கள்,4 இடங்களில் வன்முறை, 2 இடங்களில் பொதுச் சொத்துக்குச்5 சேதம் விளைவித்தது என 27 சம்பவங்கள்நடந்துள்ளன.
ஆனால் திட்டமிட்ட அரசியல் தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. கள்ள ஓட்டுத் தொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை. மொத்தத்தில் ஆங்காங்கே சிறுசிறு அசம்பாவிதங்களைத் தவிர தேர்தல் அமைதியாகவேநடந்தது என்றார்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது நடந்த குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்களின் விவரம் வருமாறு,
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் வன்முறைக்கும்பல் ஒன்று வாக்குச்சாவடிக்குள்நுழைந்து ஓட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. இதையடுத்து 5 வார்டுகளில் மறுதேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் பி.என்.பட்டி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கிடையே நடந்த மோதலில் 2 பஸ்கள்அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரம் காரணமாக 2-வது வார்டில் மறுதேர்தல் நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் செட்டிக்குப்பம் கிராமத்தலைவர் தேர்தலில் அதிமுக கவுன்சிலர் கோவிந்தராஜ்என்பவர், தோல்விபயத்தில் புதுவை ரவுடிகளை அழைத்துவந்து ஓட்டுப்போடவிடாமல் பொதுமக்களைத்தாக்கினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து என்பவரை, வன்முறைக்கும்பல் ஒன்றுஅரிவாளால் வெட்டியது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் வன்முறைக்கும்பல் வாக்குச் சாவடிக்குள்புகுந்து வாக்குச்சீட்டுகளைப் பறித்து தீ வைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள மாங்காடு அருகே உள்ள சிங்கராயபுரத்தில் ஓட்டுப் போட வந்த மக்கள் மீது போலீசார்தடியடி நடத்தினர்.
மதுரை அருகே கோவனாங்குளத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
ஆண்டிமடம் அருகே உள்ள அணில் குறிச்சியில் ஓட்டுப் பதிவைப் பார்வையிட வந்த கலெக்டரைவன்முறைக்கும்பல் தாக்க முயன்றது. போலீஸ் பாகாப்பால் அவர் உயிர் தப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி டவுன் பஞ்சாயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கலவரக்கும்பல்வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது. 20 க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தைஒடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இவ்வாறு தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் தமிழகஉள்துறைச் செயலாளரும், போலீஸ் டி.ஜி.பி.யும் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தேர்தல்அமைதியாகவே நடந்தது என்று கூறியுள்ளனர்.