ஆண்டிப்பட்டியை கலக்கும் இருவர்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதியில் 2 சுயேச்சைகள் போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒருவர் உயரிய நோக்கத்திற்காக போட்டியிடுகிறார். மற்றவரோ,வெறும் சாதனைக்காக போட்டியிடுகிறார்.
கின்னஸ் சாதனைக்காக தேர்தலில் போட்டியிடும் சேலம் ஹோமியோபதி டாக்டர் பத்மராஜன், 51வது முறையாக ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல, ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விபூதி சாமியார் என அழைக்கப்படும் 88வயது கோவிந்தனும் ஆண்டிப்பட்டியில் போட்டியிடவுள்ளார்.
எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் சுயேச்சைகளின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பஞ்சாயத்துத் தேர்தலாகட்டும், குடியரசுத் தலைவர்தேர்தலாகட்டும். சுயேச்சைகள் இல்லாத தேர்தலே இல்லை. டெபாசிட் தொகையை எவ்வளவு உயர்த்தினாலும் அசராத அசகாய சூரர்கள்இவர்கள். வட்டிக்கு வாங்கியாவது டெபாசிட் கட்டி அதை தோற்பார்கள்.
ஆனால் சில சுயேச்சைகளின் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கும்.
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வியாழக்கிழமை முதல்தொடங்கியது. முதல் நாளன்று 2 சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
ஆல் இன் ஆல் பத்மராஜன்:
இவர்களில் பத்மராஜன் குறிப்பிடத்தக்கவர். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் இந்த பத்மராஜன்.தமிழகத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிடுவது இவரது வழக்கம். வெற்றி, தோல்வி, வேட்பு மனுநிராகரிக்கப்படுவது என எது குறித்தும் இவர்கவலைப்படுவதில்லை.
அதிக தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற கின்னஸ் சாதனைக்காக இவர் தேர்தல்களில் போட்டியிடுவதைவழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குக்கூட இவர் ஒரு முறை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.51-வது முறையாக ஆண்டிப்பட்டி தொகுதியில் இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 50 முறையும் தோல்வியையேத் தழுவியவர் பத்மராஜன். மேட்டூர் பகுதி அய்யப்ப சேவா சமிதிதலைவராகவும் பத்மராஜன் இருந்து வருகிறார். வியாழக்கிழமை துவங்கிய வேட்பு மனுத்தாக்கலின்போது முதல்ஆளாக பத்மராஜன் மனுத்தாக்கல் செய்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி புலமாடனிடம் தனது வேட்புமனுவைக் கொடுத்தார் பத்மராஜன்.
விபூதி சாமியார்:
பத்மராஜனுக்கு சற்றும் சளைக்காத இன்னொரு வேட்பாளரும் இருக்கிறார். அவரது பெயர் கோவிந்தன். ஆனால்விபூதி சாமியார் என்று கூறினால்தான் அவரை அடையாளம் தெரியும். வருகிறவர்களுக்கு எல்லாம் விபூதிகொடுப்பதால் இந்தப் பெயர். பத்மராஜனைப் போலவே இவரும் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். ஆனால்இவரது பின்னணி மிகவும் உருக்கமானது.
ராமநாதபுரம் மாவட்டம் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த விபூதி சாமியார். இவருக்கு வயது 88. வயதுஇவரை விட்டு விட்டுப் போனாலும், தேர்தலில் போட்டியிடும் பழக்கத்தை இவர் விடவில்லை. ஆண்டிப்பட்டிதொகுதியிலும் இவர் போட்டியிடப் போகிறாராம்.
வியாழக்கிழமை தேனி வந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவுக்கான விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். 1971ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் விபூதி சாமியார். ஜனவரி 24ம்தேதி ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருகிற நாளில் தானும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப் போவதாககூறியுள்ளார் (அட்ரா, சக்கை!).
முதல் முதலாக பரமக்குடி சட்டசபைத் தேர்தலில் விபூதி சாமியார் போட்டியிட்டார். இதுவரை 15 முறைதேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இவரது முக்கிய குறிக்கோள், மக்கள் அனைவரும் வறுமை, பட்டினி,ஏழ்மையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதானாம்.
இவ்வளவு பெரிய குறிக்கோளைக் கொண்டுள்ள விபூதி சாமியாரின் தொழில் என்ன தெரியுமா? பரமக்குடிவீதிகளில் பிச்சை எடுப்பதுதான். யாருடைய உதவியுமின்றி பிச்சை எடுத்துத்தான் இவர் தனது வாழ்க்கையை ஓட்டிவருகிறார். பிச்சை எடுத்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தான் அவர் வேட்பு மனு விண்ணப்பத்தைவாங்க தேனி வந்துள்ளார்.
இதுவரை கையேந்தி காசு கேட்டவர் கைகளை ஏந்தி இப்போது ஓட்டு கேட்கிறார்.
வேட்பு மனுவுடன் சேர்த்துக் கட்டப்படவேண்டிய டெபாசிட்டுக்கான தொகையையும் பிச்சை எடுத்துத்தான் அவர்சேகரிக்க வேண்டும். இவ்வளவு கஷ்டத்திற்கு இடையிலும் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் விபூதிசாமியாரிடத்தில் இருப்பது பிரமிக்க வைக்கிறது.
தன்னிடம் நிறைய காசு இருந்தால் பிட் நோட்டீஸ் அடித்து மக்களிடம் விநியோகிப்பேன். ஆனால் எனது நிலைஅந்த அளவுக்கு மேம்பட்டதாக இல்லை. சாப்பிட மட்டும்தான் என்னிடம் காசு உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்குப்பதில் அமைதியாக தவம் செய்வேன். அது மட்டும்தான் என்னால் முடியும் என்கிறார் இந்த வித்தியாச சாமியார்.
ஜெயலலிதா போட்டியிடுவதால் களைகட்டிப் போயிருக்கும் ஆண்டிப்பட்டியை கலக்கப் போகிறார் விபூதி சாமியார்.