கம்பீரமாய் நடந்தது இந்திய குடியரசு தின அணிவகுப்பு
டெல்லி:
இந்தியாவின் 53வது குடியரசு தின அணிவகுப்பு ராணுவ மிடுக்குடன் நடந்து முடிந்தது.
தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து இந்தியா தனது படைகளை பாகிஸ்தான் எல்லையில் குவித்துள்ளது. இதனால்,இந்த அணி வகுப்பு நடக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
ஆனால், இந்த அணிவகுப்பு நிச்சயம் நடக்கும் என ராணுவமும் மத்திய அரசும் அறிவித்தன.
அதே போல இன்று தொடங்கிய அணிவகுப்பு வண்ணமயமாகவும் கம்பீரமாகவும் நடந்தது. ஆனால், டாங்கிகள்,கவச வாகனங்கள், பீரங்கிகள், ரேடார்களின் அணிவகுப்பு நடக்கவில்லை. அதே போல அணிவகுப்பில் பங்கேற்றராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது.
ராணுவத்தினரும் பெருமளவிலான ஆயுதங்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் நாட்டு அதிபர் கசாம் உதீன் தனது மனைவியுடன் கலந்துகொண்டு அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ராணுவ வீரர்களின்மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் வாஜ்பாய் மறைந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் 3காவலர்களுக்கு அசோக் சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். அவர்களது குடும்பத்தினர் இந்த விருதுகளைப்பெற்றுக் கொண்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த 5 போலீசாருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 422ராணுவ, எல்லைப் பாதுகாப்புப் படை, போலீஸ், தீயணைப்புப் படை, ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவரின் விருதுகள் வழங்கப்பட்டன.
டெல்லியில் அதிபயங்கர பாதுகாப்பு:
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும்பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் 50,000 போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உயரமான கட்டடங்கள் அனைத்தும் நேற்று பிற்பகல் முதல் சீல் வைக்கப்பட்டு ராணுவத்தின்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டன.
தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் முக்கிய இடங்களில்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் இடங்களைச் சுற்றி விமான எதிர்ப்பு பீரங்கிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், சிறப்புக் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் நாடு முழுவதும் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் தேசியக் கொடிகளை பொது மக்களும் சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.