அன்பழகனிடம் வருத்தம் தெரிவித்தார் ஜெயலலிதா
சென்னை:
தனது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகனை 6வது வரிசையில் அமரவைத்ததற்காக ஜெயலலிதா வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அன்பழகனும், சென்னை மேயர் ஸ்டாலினும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால், அவர்கள் 6வது வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்காரவைக்கப்பட்டனர்.
இதற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கருணாநிதியை வசைபாட ஜெயலலிதா அறிக்கைவிட்டிருந்தார். இந் நிலையில் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்காமல் ஜெயலலிதா என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறார் என கருணாநிதி கூறியிருந்தார்.
அதே போல தன்னை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்த கருணாநியின் பெருந்தன்மையைப் பாராட்டாமல் அவரைஇகழ்வது ஜெயலலிதாவுக்கு அழகல்ல என்று அன்பழகனும் அறிக்கை விட்டிருந்தார்.
இந் நிலையில் திடீரென செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது திரு. அன்பழகன் அவர்களை 6வது வரிசையில் உட்கார வைத்தது மிகப்பெரிய தவறு தான். அவர் மீது நான் அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
அதிகாரிகள் தான் தவறுதலாக அவருக்கு 6வது வரிசையில் இடம் ஒதுக்கிவிட்டனர். நான் மேடையில் அமர்ந்துவிழா தொடங்கிய பின்னர் தான் அதைக் கவனித்தேன். முன்பே இது எனக்குத் தெரியாது. இதனால் என்னால்அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்பே எனது கவனத்துக்கு இது வந்திருந்தால் நிச்சயம் அவரை முதல்வரிசையில் அமர வைத்திருப்பேன்.
திமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுப்படி எதிர்க் கட்சித் தலைவருக்கு 18வது இ-டம் தான் தரப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தான் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நான் இதைச் சொல்வதால் அன்பழகனை 6வது வரிசையில் அமர வைத்ததை நியாயப்படுத்துகிறேன் என்றுகருதிவிட வேண்டாம். அது தவறு தான்.
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அந்த மரபை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதனால்எதிர்காலத்தில் தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க முடியும்.
திரு. அன்பழகம் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துஅவருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதமும் எழுதியிருக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனது பதவியேற்புக்கு அன்பழகன், ஸ்டாலினை அழைப்பிதழ் அனுப்பி கெளரப்படுத்தினார் ஜெயலலிதா.
அந்த அழைப்பை ஏற்று இருவரையும் அனுப்பி வைத்து தனது அரசியல் நாகரீகத்தைக் காட்டினார் கலைஞர்.
இப்போது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து தனது அரசியல் முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.