வரதட்சணை கேட்டவனை தூக்கி எறிந்த புதுமைப்பெணுக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
50 பவுன் நகைக்காக கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற மாப்பிள்ளையை வேண்டாம் என்று புறக்கணித்துப் புதுமைபடைத்துள்ளார் காஞ்சிபுரத்தை சேர்ந்த வக்கீல் பெண்.
இந்த செயலை தி.மு.க தலைவர் கருணாநிதி மனதாரப் பாராட்டியுள்ளார். இப்படிப்பட்ட பெண்கள்தான் நாட்டுக்குத் தேவை என்றுஅவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் பல்லவன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சப்-கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுந்தரவல்லி.இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். சுந்தரவல்லிக்கும் என்ஜீனியராக இருக்கும் சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவரான மூர்த்திஎன்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் திருமணம் தாம்பரத்தில் புதன்கிழமை நடப்பதாக இருந்தது. இதற்காக மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும்,செவ்வாய்க்கிழமை இரவே திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். அப்போது பெண் வீட்டார் சார்பில் போடுவதாக இருந்த 50பவுன் நகை குறித்து மாப்பிள்ளை வீட்டார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பெண் வீட்டார், கொஞ்சம் பண சிரமம் இருப்பதாகவும், கல்யாணத்திற்குப் பின் முழு நகைகளையும் போடுவதாகவும்தெரிவித்துள்ளனர். அவ்வளவுதான், வெகுண்டு எழுந்தனர் மாப்பிள்ளை வீட்டார். 50 பவுன் நகையை எடுத்து வைத்தால்தான்ஆச்சு, இல்லாவிட்டால் கல்யாணம் கேன்சல் என்று கூறியுள்ளனர். மாப்பிள்ளையே இந்த எதிர்ப்புக் குரலுக்கு தலைமை வகித்தான்என்பதுதான் வேதனைக்குரியது.
இரு தரப்பினருக்கு இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரவல்லி ஒரு முடிவுக்கு வந்தார்.
தனது பெற்றோரை அழைத்த அவர், திருமணத்திற்கு முன்பே இப்படி பண ஆசை பிடித்து அலையும் இந்த நபரைக் கல்யாணம்செய்து கொண்டு காலம் பூராவும் கஷ்டப்பட விரும்பவில்லை. இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம். கல்யாணத்தை நிறுத்திவிடுங்கள் என்று தீர்மானமாக கூறி விட்டார்.
இதைக் கேட்டதும் பெற்றோர் ஆடிப் போய் விட்டனர். ஆயினும், மகள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த அவர்களும்,மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று சுந்தரவல்லி சொன்னதை கூறியுள்ளனர்.
முகத்தில் அடித்தார் போன்ற இந்த செயலால் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.இதையடுத்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். அதன் பேரில் வரதட்சணை கேட்டகுற்றத்திற்காக மாப்பிள்ளை மூர்த்தி, அவரது சகோதரர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாப்பிள்ளையின் அம்மா, அப்பா, சகோதரி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருணாநிதி பாராட்டு:
சுந்தரவல்லியின் துணிச்சலான செயல், இதுபோன்ற எத்தர்களுக்கு சரியான பாடமாக அமையும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார். சுந்தரவல்லியின் செயலைப் பாராட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
குங்குமம் இதழில் நான் வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். அதில் வரதட்சணை குறித்த ஒரு கதை வந்தது. அந்தக்கதையைப் படித்த எனது நண்பர் ஒருவர், வரதட்சணை எல்லாம் பழைய காலத்து செய்தி, இப்போது யார் இதைபெரிதுபடுத்துகிறார்கள் என்றார்.
அவர் சொன்னது எப்படியோ, ஆனால் வரதட்சணைக் கொடுமை என்பது இன்னும் தொடர்கிறது என்பதற்கு, இதோ காஞ்சிபுரத்தில்நடந்த திருமணத்தில் திடீர் திருப்பம் என்ற செய்தி உண்மையாக்கியுள்ளது.
50 பவுன் நகையை வரதட்சணையாகத் தந்தால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடித்தவர், மணமகளின் துணிச்சலான முடிவால்இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
மணவிழாவுக்கு முன்பு பேசித் தீர்க்கப்பட்ட சீர்வசை, ரொக்கப் பணம் ஆகியவை வந்து சேராவிட்டாலோ, அல்லது தாமதம்ஆனாலோ, மாமியார்களின் ஆணைப்படி ஸ்வட் அடுப்புக்கு இரையான மருமகள்கள் எத்தனை பேர்? நேரடியாகவே கணவன்எனும் பணப் பேய்களின் கொடிய கரங்களுக்கு உயிரைப் பறிகொடுத்த அபாக்கியவாதிகள் எத்தனை பேர்?
அந்த அபலைகளின் பட்டியலில் சேராமல், தீயில் கருகி விபத்துக்கு விருந்து வைத்து அழைத்திடாமல், இந்த காஞ்சிபுரத்துசுந்தரவல்லி, சுதந்திரமாக சிந்தித்து, சூழ்ச்சி வலையில், சூதர் குகையில், சுமடர் பிடியில் சிக்காமல், தொடக்கத்திலேயே விழித்துக்கொண்டு உயிர் தப்பியது மட்டுமல்ல, வாழ்வுக்கே எமனாக வரவிருந்தவனுக்கு தகுந்த தண்டனை வாங்கத் தர தயாராகி விட்டார்.
இன்று புவியில் பெண்கள் சிறு நிலையில் இருக்கவில்லை. விழித்துக் கொண்டார் எனும் பாவேந்தர் பாரதிதாசனின் சொல்லுக்குஉதாரணமாய்த் திகழும் இந்த பெண்மணிக்கு நமது பாராட்டுக்கள்.
நிதி வசூலிப்பதற்கே திருமணங்கள் என்று கருதி செயல்படுகிற இதுபோன்ற எத்தர்களை திருத்தவும், எச்சரிக்கை செய்வதற்கும்இந்த காஞ்சிபுரம் நிகழ்ச்சி பயன்படுமேயானால் அது சமுதாய விழிப்புணர்வுக்கு குறிப்பாக பெண்ணுரிமைப் போராட்டத்திற்குபெரும் வெற்றியாகவே அமையக் கூடும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
வரதட்சணையை கடுமையாக எதிர்க்கும் கருணாநிதி காதலுக்கு எப்போதும் பச்சைக் கொடி காட்டுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது வீட்டில் பல காதல் திருமணங்களை தானே முன்னின்று நடத்தி வைத்திருப்பவர்.