திருச்சி அருகே ஈவ் டீசிங்கால் பெரும் கலவரம்: போலீசார் துப்பாக்கிச் சூடு
திருச்சி:
திருச்சி அருகே துறையூரில் ஈவ் டீசிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக மாறியது. இதையடுத்துவன்முறைக் கும்பலைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துறையூர் விநாயகன் நெருவைச் சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மகள் சத்யா. இவர் நேற்று தெருவில் நடந்துசென்றபோது முத்துராஜா தெருவைச் சேர்ந்த இரு வாலிபர்கள் அவரைக் கேலி செய்தனர்.
இதையடுத்து சத்யா அழுதவாரே தனது தாயாரிடம் சென்று இளைஞர்கள் தன்னைக் கேலி செய்தது குறித்துக்கூறினார். உடனே அவரது தாயார் அந்தத் தெருவைச் சேர்ந்த இருவரை அழைத்துக் கொண்டு கேலி செய்தவாலிபர்களின் வீட்டுக்குச் சென்று புகார் செய்தார்.
அப்போது அந்த இளைஞர்களின் வீட்டில் இருந்தவர்கள் புகார் செய்ய வந்த சத்யாவின் தாயாரைத் தாக்கினர்.அவருடன் வந்த மற்ற இருவரையும் சிறை பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து சத்யாவின் தாயார் தனது தெருவுக்குச் சென்று நடந்ததைத் சொன்னார். இதைத் தொடர்ந்து விநாயாகந்தெருவைச் சேர்ந்த பொது மக்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கோரி துறையூர்-பெரும்பலூர்நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக வந்து, சாலை மறியல் செய்துகொண்டிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அடிதடியாக மாறியது.
இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இருவரும் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இது குறித்துத்தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர்.
தவறு செய்த இளைஞர்களிடம் விசாரிப்பதற்காக முத்துராஜா தெருவுக்குச் சென்றனர். அப்போது போலீசார் மீதும்அந்த இளைஞர்களின் உறவினர்களும் நண்பர்களும் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இன்ஸ்பெக்டரின்மண்டை உடைந்தது. அவர் பலத்த காயமடைந்தார். மேலும் 4 போலீசாரும் காயமடைந்தனர்.
இந் நிலையில் துறையூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் நடந்த சண்டை பெரும் கலவரமாக மாறியது. அந்தப்பக்கம் வந்த பஸ்கள், கார்களையும் வன்முறையாளர்கள் தாக்கினர்.
இதையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை, இருதரப்பினரும் பயங்கர வெறியுடன் தாக்கிக் கொண்டனர். இதில் 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பலன் ஏற்படாததால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால்சுட்டனர். 5 ரவுண்டுகள் வானை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சுடு நடத்தினர். இதன் பின்னர் தான் அந்தக் கும்பல்கலைந்து ஓடியது.
அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்என்பதால் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் போலீஸ் படை அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.