குஜராத் விவகாரம்: நீதிமன்றத்தை அணுக கலாம் அனுமதி
டெல்லி:
குஜராத்தில் தேர்தலை ஒத்தி வைத்துவிட்ட தேர்தல் கமிஷனின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட மத்தியஅரசுக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒப்புதல் அளித்துள்ளார்.
குஜராத்தில் இன்னும் சகஜநிலை திரும்பவில்லை என்பதால் அங்கு இப்போதைக்குத் தேர்தல் நடத்த முடியாது என்றுதேர்தல் கமிஷன் கூறியதோடு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும்பரிந்துரைத்துள்ளது.
இதனால் ஆளும் பா.ஜ.க. அரசு அதிர்ச்சி அடைந்தது. தேர்தல் கமிஷன் தன்னுடைய வரம்புகளை மீறிச்செயல்படுவதாக துணைப் பிரதமர் அத்வானி குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியமத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி ஒரு புகார் கடிதத்தை நேற்று டாக்டர் கலாமிடமும் மத்திய அரசுசமர்ப்பித்தது.
இந்நிலையில் அந்தக் கடிதத்திற்கு டாக்டர் கலாம் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்று காலை இங்கிலாந்து செல்வதற்காகக் கிளம்பிய அத்வானி டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம்இதைத் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க முடியுமாஎன்பது தான் முக்கிய பிரச்சனையாகியுள்ளது. அங்கு நரேந்திர மோடியின் ஆட்சியை நீக்கிவிட்டு ஜனாதிபதிஆட்சியை அமலாக்க மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால், மோடியை வைத்துக் கொண்டு அங்கு தேர்தல்நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் நினைக்கிறது.
இது அரசியல் சட்டரீதியிலான பிரச்சனை என்பதால் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறிய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து டாக்டர் கலாமின் ஒப்புதல் பெறப்பட்ட அந்தக் கடிதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலிடம் அளிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க அரசியல் சட்ட பெஞ்ச் ஒன்றைஇனிமேல் தான் நீதிபதி கிர்பால் அமைக்கவுள்ளார்.