தமிழகத்திற்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் விட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
காவிரியில் மேட்டூர் அணைக்கு நாளை முதல் தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்றுகர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காவிரி நடுவர் மன்ற உத்தரவின் படி இந்த ஆண்டு திறந்து விட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விடாதகாரணத்தால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனால் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையக் கூட்டத்தினால் ஒரு பயனும் இல்லை என்றுகருதிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்தார்.
அதன்படியே சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நடுவர் மன்ற உத்தரவை மீறியஅந்த மாநிலத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தன் மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காவிரியில் தினமும் நீர் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசின்சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஜாவெளி முயற்சித்தார். வரும் 15ம் தேதிக்குள் காவிரி ஆணையத்திடம்கண்காணிப்புக் குழு இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது என்றும் அதன் விவரங்களைத் தெரிந்துகொண்ட பின்னர் தீர்ப்பை அளிக்கலாம் என்றும் அவர் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவருடைய வாதத்தை மறுத்த நீதிபதிகள், "அந்த அறிக்கை வரும்போது வரட்டும். அதுவரை காவிரிடெல்டா விவசாயிகள் வாட வேண்டுமா? சமீபத்தில் பெய்த மழையினால் தான் கர்நாடகத்தில் உள்ள நான்குஅணைகளிலும் 41.8 டி.எம்.சியிலிருந்து 73.4 டி.எம்.சியாக நீரின் அளவு அதிகரித்து விட்டதே. அதிலிருந்துநாளை முதல் தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடட்டும்" என்றுஉத்தரவிட்டனர்.
தமிழக அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வேணுகோபாலும் நன்றாகவே வாதாடினார். ஏற்கனவே குறுவைசாகுபடி பாதிக்கப்பட்டு விட்டது. தற்போது சம்பா சாகுபடிக்கும் அதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. எனவே நீர்திறந்து விட உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற ரீதியில் வேணுகோபால் தன் வாதங்களைஎடுத்துரைத்தார்.
மேலும் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை கர்நாடக அணைகளுக்கு எவ்வளவு நீர் வரத்து இருந்ததுஎன்ற புள்ளி விவரத்தையும் வேணுகோபால் எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, அவற்றை வைத்துக் கொண்டேநீதிபதிகள் தங்களுடைய இடைக்காலத் தீர்ப்பை அறிவித்தனர்.
வறட்சி ஏற்படும் சூழ்நிலையில் தமிழகமும் கர்நாடகமும் எவ்வாறு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது என்பதுகுறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இவ்விவகாரத்தில் காவிரி நதி நீர் ஆணையம் தன்னுடைய இறுதியான முடிவை அறிவிக்கும் வரை கர்நாடக அரசுதன்னுடைய அணையிலிருந்து காவிரியில் தினமும் 1.25 டி.எம்.சி. நீரை தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்குத்திறந்து விட வேண்டும் என்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால்தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
முன்னதாக, நேற்று நடந்த விசாரணையின் போது அதை அடுத்த நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
மேலும் கடந்த ஆகஸ்டு 27ம் தேதி டெல்லியில் காவிரி ஆணையம் கூடிய போது, நீர் தர கர்நாடகம் தொடர்ந்துமறுத்ததையடுத்து ஜெயலலிதா திடீரென்று அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து வாஜ்பாய் உள்ளிட்டஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, காவிரி விஷயத்தில் கர்நாடக அரசும்மத்திய அரசும் மாறி மாறி தமிழகத்தை ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தமிழகத்திற்கு தினமும் கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என்றுஉத்தரவிட்டிருப்பது தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாளை அவசரமாக கூடும் கர்நாடகஅமைச்சரவை:
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக அமைச்சரவை நாளைஅவசரமாகக் கூடுகிறது.
மேலும் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அம்மாநில முதல்வர் கிருஷ்ணாஅழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது கிருஷ்ணா டெல்லியில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.