பிறந்தநாள் விழா: அடக்கி வாசிக்க ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஜெ. அறிவுரை
சென்னை -சாத்தான்குளம்:
தனது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடுமாறும், சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துமாறும்அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள். வழக்கமாக ஆண்டுதோறும் சென்னையில் இதையொட்டி தடபுடல் நிகழ்ச்சிகள் நடக்கும்.மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மைக் செட் கட்டி, சீரீயல் செட் போட்டு, ஆட்டம், பாட்டம் என பெரும் கூத்தே நடக்கும். இதற்காகஆங்காங்கே வசூல் வேட்டையும் நடக்கும்.
அந்த வசூல் வேட்டையை அதிமுகவினர் இந்த முறையும் ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், இம்முறை மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதாலும், விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாலும் தனது பிறந்தநாள் விழாவை தடபுடலாக நடத்தினால் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்புக்கு உள்ளாவோம் என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார்.
மேலும் விவசாயிகள் தற்கொலையைக் காட்டி தனது பிறந்த நாள் விழாக்களை ஒட்டு மொத்தமாக ரத்து செய்தார் திமுக தலைவர்கருணாநிதி. இந் நிலையில் தான் மட்டும் ஆர்பாட்டத்துடன் கொண்டாடினால் கெட்ட பெயர் தான் ஏற்படும் என்பதால் சாத்தான்குளம்தேர்தலை காரணமாக வைத்து பிறந்த நாள் விழாவை அடக்கி வாசிக்குமாறு அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட உடன் பிறப்புக்கள் ஏற்பாடுகள் செய்வதாக அறிகிறேன். மழை பொய்த்ததாலும், தமிழகவறட்சியாலும், கர்நாடகத்தின் செயலாலும் மக்கள் வாடி வரும் நிலையில் இந்தக் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்று கருதுகிறேன்.
மேலும் 26ம் தேதி தேதி சாத்தான்குளத்தில் தேர்தல் நடக்கும்போது நமது கவனத்தை வேறு எதிலும் திருப்பக் கூடாது என்பதே என்விருப்பம்.
நேரில் கண்டு எனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற உங்கள் அன்பும் ஆர்வமும் புரிகிறது. அன்பு சகோதரியான என் மீது நீங்கள்காட்டும் பாசத்தை நான் அறியாமல் இல்லை. ஆனால், எல்லோரும் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவிக்க வேண்டியதில்லை என்றேகருதுகிறேன்.
ஒருவேளை எனது பிறந்த நாளை அவசியம் கொண்டாடத்தான் வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் எந்தவித ஆராவாரமும்இல்லாமல் நலிந்தவர்களுக்கும், ஆதரவில்லாதவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள்.
அன்பு என்பது பேசப்படுவது அல்ல. செயலில் காட்ட வேண்டியது. எனவே, ஆங்காங்க ஆக்கப்பூர்வமான சமூகப் பணிகளில் உங்களைஈடுபடுத்திக் கொண்டால் அதையே உங்கள் வாழ்த்தாக நான் ஏற்றுக் கொள்வேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரச்சாரம் தீவிரம்:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. நீலமேகவர்ணத்தை ஆதரித்து10 அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
அதே போல காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்களை விட பிற கட்சியினர் தான் தீவிர ஓட்டு வேட்டை நடத்திவருகின்றனர்.
திமுகவினரும் மதிமுகவினரும் காங்கிரசுக்கு மறைமுகமாக வேலை பார்த்து, யுத்திகளை வகுத்துத் தந்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் நல்லகண்ணு தனது கட்சியினரை காங்கிரசுக்கு ஆதரவாகக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
சாத்தான்குளத்தை 11 மண்டலங்களாகப் பிரித்துள்ளது காங்கிரஸ். ஒவ்வொரு மண்டலமும் ஒவ்வொரு கோஷ்டியின் வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியில் வாங்கும் ஓட்டை வைத்துத் தான் கோஷ்டிகளுக்கு கட்சித் தலைமை மரியாதை தரும் என்றுடெல்லி கூறிவிட்டதால் பிரச்சாரத்தில் கதர் சட்டைகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
சுயேச்சைக்கு ஆதரவு தரும் சுவாமி:
இந் நிலையில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சைகளில் ஒருவருக்கு ஜனதா கட்சி ஆதரவு தரும் என அதன் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
எந்த சுயேச்சைக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவை திருநெல்வேலி மாவட்ட ஜனதா கட்சித் தலைவி வாணி பாலசுப்பிரமணியம் முடிவுசெய்வார் என்றார் சு.சுவாமி.
அதிமுக எந்த நல்ல திட்டத்தையும் மக்களுக்குச் செய்யவில்லை என்று கூறிய சுவாமி, காங்கிரஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான திமுக,பா.ம.கவுடன் நெருங்கி வருவதாகவும் கூறினார். இதனால் இரு வேட்பாளர்களுக்கும் ஆதரவு தராமல் சுயேச்சையை ஆதரிப்பதாகக்கூறினார்.
-->