பழங்காநத்தம், அண்ணா, பெரியார், திருவள்ளுவர், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி: மதுரையில் மீண்டும் பஸ் நிலைய பிரச்சினை
மதுரை:
மதுரையில் மீண்டும் பஸ் நிலையப் பிரச்சினை வெடித்துள்ளது.
மதுரை என்றாலே எல்லோருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், சாலையோர இட்லிக் கடைகள், குழப்பம் மிகுந்த பஸ் நிலையங்கள் தான்நினவுக்கு வரும்.
மதுரையில் ஆரம்பத்தில் பெரியார் பஸ் நிலையம், மற்றும் அருப்புக் கோட்டை பஸ் நிலையம் என இரு பஸ் நிலையங்கள் இருந்தன.பின்னர் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்துக்கு (இப்போதைய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்) ஒரு பஸ் நிலையம்உருவாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களுக்கு தனியாக அண்ணா பேருந்துநிலையம் உருவாக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையங்கள் எண்ணிக்கை 4 ஆனது.
பெரியார், அண்ணா பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர் பஸ்களுடன் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. அருப்புக்கோட்டை பஸ்ஸ்டாண்டில் இருந்து விருதுநகர், கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
பெரியார் பஸ் நிலையத்தில் ஏகப்பட்ட பஸ்கள் வந்து சென்றதால் அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் மழை பெய்துவிட்டால் பஸ்நிலையமே தண்ணீரில் தான் மிதக்கும். இதனால் மதுரை மக்கள் பட்ட அவதி சொல்லி மாளாது.
இந் நிலையில் மதுரை மாநகர ஆணையராக இருந்த டேவிதார் பஸ் நிலையத்தின் சுமையைக் குறைக்க முடிவு செய்து ஆரப்பாளையம்மற்றும் பழங்காநத்தம் பகுதிகளில் புதிய பஸ் நிலையங்களை ஏற்படுத்தினார்.
கோவை உள்ளிட்ட மேற்குப் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஆரப்பாளையத்திலிருந்தும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள்பழங்காநத்தத்தில் இருந்தும் செல்ல வகை செய்யப்பட்டது.
இதனால் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு பெரியார், அண்ணா, பழங்காநத்தம், ஆரப்பாளையம், அருப்புக்கோட்டை பஸ் நிலையம்,திருவள்ளுவர் பஸ் நிலையம் என 6 பஸ் நிலையங்கள் இருந்தன.இதனால் மக்கள் ஆரம்பத்தில் குழப்பி, புலம்பினாலும் பின்னர் அதற்குமக்கள் பழகிக் கொண்டனர்.
இந் நிலையில் தான் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து பஸ் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கே.கே.நகரை அடுத்தமாட்டுத்தாவணி என்ற இடத்தில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூ. 10 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.
பழங்காநத்தம், அண்ணா பேருந்து நிலையங்களில் இருந்து இயங்கி வந்த பேருந்துகள் அனைத்தும் ஒருங்கிணைந்த பேருந்துநிலையத்துக்கு மாற்றப்பட்டன. அதேபோல திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் மாட்டுத் தாவணிக்கு மாற்றப்பட்டன.
இதனால் பேருந்து நிலையங்களின் எண்ணிக்கை மீண்டும் 3 ஆகக் குறைந்ததது.
மேலும், இந்த வெளியூர் பேருந்துகள் நகருக்குள் வந்து போக்குவரத்தை நெரிசலை ஏற்படுத்துவதைத் தடுக்க மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுக்கு ரூ.40 கோடி செலவில் சுற்றுச் சாலையும் போடப்பட்டது.
இத் திட்டங்களால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
இச் சூழ்நிலையில் தென் மாவட்டப் பேருந்துகளை மீண்டும் பழங்காநத்தத்தில் இருந்து இயக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நாளைமுதல்(வியாழக்கிழமை) இந்த மாற்றம் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சுற்றுச் சாலையில் சுற்றிச் செல்வதால் டீசல் செலவு அதிகமாகிறது, பயணிகளுக்கு மாட்டுத் தாவணி வந்து செல்வதும் சிரமமாக உள்ளது, சிலதனியார் பேருந்துகள் போலீஸாரைக் கவனித்துவிட்டு நகருக்குள் வந்து செல்வதால் அந்தப் பஸ்களுக்கு நல்ல கூட்டம் வருகிறது, இதனால்அரசுப் பேருந்துகள் பாதிக்கப்படுகின்றன.
இவை அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் காரணங்கள்.
ஆனால், உண்மையான காரணம் பற்றி விசாரித்தபோது திடுக் தகவல் கிடைத்தது. பழங்காநத்தம் பஸ் நிலையம் மூடப்பட்டதால் வியாபாரம்இழந்த நூற்றுக்கணக்கான கடைக்காரர்கள் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து மீண்டும் பஸ் நிலையத்தை இந்தப் பகுதிக்குக் இழுத்துவந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
ஆனால், மீண்டும் பழங்காநத்தம் பகுதிக்கு பஸ்கள் மாற்றப்பட்டால் மறுபடியும் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றுபழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
மேலும் ரூ. 10 கோடி செலவில் மாட்டுத்தாவணியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கும், அதற்குச் சென்று வர ரூ. 40கோடி செலவில் அமைக்கப்பட்ட சுற்றுச் சாலைக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
இந்த பஸ் நிலைய மாற்றத்தை எதிர்த்து மாட்டுத்தாவணி பஸ் நிலைய வியாபாகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பழங்காநத்தம் பஸ்நிலையம் வந்தால், இங்கு வரும் பஸ்களின் எண்ணிக்கை குறைந்து தங்களது வர்த்தகம் பாதிக்கப்படும் என அவர்கள் புலம்புகின்றனர்.
மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து பஸ் நிலைய வியாபாகள் அனைவரும் இன்று கடையடைப்புப் போராட்டமும் நடத்தினர்.
மீண்டும் மதுரை பஸ் ஸ்டாண்டு குழப்பம் ஆரம்பம்.....
-->