போர் அபாயம்: ஈராக்கிலிருந்து இந்தியர்கள் வெளியேறினர்
பாக்தாத்:
ஈராக் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற நிலையில் ஈராக்கில் உள்ளஇந்தியத் தூதரக அதிகாரிகள் உள்பட 50 இந்தியர்களும் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.
நேற்று இரவு பாக்தாத்திலிருந்து அம்மானுக்கு வந்து சேர்ந்த ஈராக்கிற்கான இந்தியத் தூதர் பி.பி.தியாகி கூறுகையில்,
ஈராக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு இந்தியரும் இப்போது இல்லை. அனைவரும்வெளியேறி விட்டனர். ஆனாலும் இந்தியத் தூதரகம் திறந்துதான் இருக்கும். அங்குள்ள உள்ளூர்இராக் அதிகாரிகள் அதைக் கவனித்துக் கொள்வார்கள்.
சதாம் பல்கலைக்கழகத்தில் அராபிய மொழி படித்து வரும் 15 இந்திய மாணவர்கள் கூட வெளியேறிவிட்டனர். ஒருவர் மட்டும் இன்னும் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து முடிவு செய்யாமல்உள்ளார்.
அதேபோல் ஈராக்கில் உள்ள மற்ற இந்தியர்களும் அந்நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 12 இந்தியத் தொழிலதிபர்கள் மட்டும் அங்கு இன்னும் உள்ளனர்.அவர்களும் விரைவில் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேறலாம். விசாபோன்ற ஆவணங்களுக்காக இந்தியத் தூதரகத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார்தியாகி.
அமெரிக்கா காலக்கெடு முடிகிறது:
இதற்கிடையே ஈராக் பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காக அமெரிக்கா, பிரிட்டன் விதித்துள்ளகாலக் கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும் இன்று கூடிமுக்கியமான முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.
ஈராக் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள்தாங்கள் கொண்டு வந்துள்ள இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நாவுக்கு மேலும் ஒரு நாள்அவகாசம் அளித்துள்ளன.
நேற்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் மரியா ஆகியோரைச்சந்தித்துப் பேசினார் அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ். போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சொந்தமானஅஸோர்ஸ் தீவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
""நாளைதான் (இன்று) இந்த உலகத்திற்கு உண்மை தெரியக் கூடிய நாள்"" என்று சந்திப்பிற்குப்பின்னர் நிருபர்களிடம் புஷ் தெரிவித்தார். ""பேரழிவு ஆயுதங்களை ஈராக் உடனடியாக அழிக்கவேண்டும். மறுத்தால் நாங்கள் அவற்றை வலுக்கட்டாயமாக படைகளைத் திரட்டி அழிப்போம்""என்றும் அவர் கூறினார்.
இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு குழு:
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் இன்று இரவு 08.30 மணிக்கு (இந்தியநேரப்படி) நடைபெறுகிறது.
ஏற்கனவே குறிக்கப்பட்ட நேரத்திற்கு 5 மணி நேரம் முன்பாகவே இந்தக் கூட்டம் நடைபெறஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஐ.நா. ஆயுதப் பரிசோதகர்கள் ஈராக்கில் தொடர்ந்து தங்கள் பணிகளில்ஈடுபடுவார்கள் என்று ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான டாக்டர் ஹான்ஸ் பிளிக்ஸ்தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி தூதரகம் மூடல்:
போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈராக்கில் உள்ள ஜெர்மனி தூதரகம்மூடப்படுகிறது.
அங்குள்ள ஜெர்மானியர்கள் அனைவரும் உடனே ஈராக்கை விட்டு வெளியேறுமாறும் ஜெர்மனிஅரசு கேட்டுக் கொண்டுள்ளது.
போருக்கு தயாராக அமெரிக்க படைகள்:
இதற்கிடையே குவைத், இஸ்ரேல் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சுமார் 3 லட்சம் அமெரிக்கப்படையினர் ஏற்கனவே குவிக்கப்பட்டு போருக்குத் தயாராகி வருகின்றனர்.
வளைகுடா நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்காகேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இஸ்ரேல், சிரியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள தங்களுடைய தூதர்களையும்,தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துள்ளது அமெரிக்கா.
ஈராக்கில் ஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அந்நாட்டை விட்டுவெளியேறுமாறும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல் பிரிட்டனும் தன் நாட்டு மக்களை குவைத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சதாம் எச்சரிக்கை:
இதற்கிடையே அமெரிக்கா தங்கள் நாட்டைத் தாக்கினால் உலகில் உள்ள அனைத்து அமெரிக்கநிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் மிரட்டியுள்ளார்.
நிலம், கடல், ஆகாயம் என்று அனைத்து திசைகளிலும் பயங்கரமான தாக்குதலை நடத்துவோம் என்றுசதாம் கூறியுள்ளார்.
போருக்காக ஈராக்கும் முழுவீச்சில் தயாராகித்தான் வருகிறது. தன்னுடைய மகன்களுக்கும் முக்கியப்பொறுப்புகளைக் கொடுத்து போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளார் சதாம்.
இதற்கிடையே அமெரிக்கப் படைகளை தாக்குவதற்காக ஈராக்குக்கு எங்கள் நாட்டு இளைஞர்களைஅனுப்புவோம் என்று பாகிஸ்தானில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
-->