சட்டசபை: திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாய் வெளியேற்றம்
சென்னை:
சட்டசபை நடவடிக்கைகளை செயல்பட விடாமல் தடுத்ததாக திமுக எம்.எல்.ஏக்கள் இன்று அவையிலிருந்துகுண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபை திமுக துணைத் தலைவரான துரைமுருகன் கடந்த 1989ல் சட்டசபையில் தன் சேலையைப் பிடித்துஇழுத்து தன்னை அவமானப்படுத்தியதாக முதல்வர் ஜெயலலிதா நேற்றைய சபைக் கூட்டத்தின்போது குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியதும், இந்தப் பிரச்சனை குறித்து முதல்வர் தெளிவாகவிளக்கமளிக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் உறுப்பினரான சந்தானம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஜெயலலிதா பேசுகையில்,
இந்தப் பிரச்சனையை மீண்டும் இன்றைக்கும் பேச நான் விரும்ப வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் உறுப்பினர் விளக்கம் கேட்டுள்ளார்.
தமிழக சட்டசபை வரலாற்றில் இதை ஒரு கரும்புள்ளியாகவே நான் கருதுகிறேன். அப்போது நான் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தபோது, அப்போதைய முதல்வரான கருணாநிதிக்கு எதிராக ஒழுங்குப் பிரச்சனை கொண்டுவருவது தொடர்பாகப் பேச அனுமதி கோரினேன்.
ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அத்தோடு நின்றுவிடவில்லை. கருணாநிதி என்னைப் பற்றி மிகவும்கீழ்த் தரமாகப் பேசினார்.
அப்போதுதான் துரைமுருகன் என்னுடைய சேலையைப் பிடித்து இழுத்தார். அது கிழிந்து விட்டது. மிகவும்அவமானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டார்.
அப்போது அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசரும் சாத்தூர் ராமச்சந்திரனும் என்னைப் பாதுகாக்க முயற்சித்தனர்.அது உண்மையா, இல்லையா என்று ராமச்சந்திரனே கூறட்டும் என்றார் ஜெயலலிதா.
ராமச்சந்திரனும் அதை ஆமோதித்தார். இருந்தாலும் இது தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க வேண்டும்என்று அவரும் துரைமுருகனும் சபாநாயகரிடம் அனுமதி கோரினர்.
ஆனால் சபாநாயகர் காளிமுத்து இதற்கு அனுமதி அளிக்க மறுத்தார். "நேற்றே இந்தப் பிரச்சனை குறித்து நீங்கள்விளக்கம் அளித்து விட்டீர்கள். இன்று அது தொடர்பாகப் பேச உங்களுக்கு அனுமதி இல்லை" என்றுதுரைமுருகனிடம் கூறினார் காளிமுத்து.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு மட்டும் இரண்டாவது நாள் பேச அனுமதி அளித்தீர்களே என்றுஎதிர்க் கட்சித் தலைவரான அன்பழகன் கேட்டார். அதற்கு பதிலளித்த காளிமுத்து, பாதிக்கப்பட்டவர் என்றமுறையில் அவர் பேசுவதற்கு உரிமை உள்ளது என்றார்.
சபாநாயகர் இவ்வாறு கூறியதும் திமுக உறுப்பினர்கள் கடுப்படைந்து, கோஷம் போட்டு கலாட்டா செய்தனர்.அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று கொண்டு கத்திக் கொண்டே இருந்தனர்.
அவர்களை அமைதியாக இருக்கையில் உட்காருமாறு காளிமுத்து பலமுறை கூறிப் பார்த்தார். ஆனால் அவர்கள்அதைக் கண்டு கொள்ளவே இல்லை. சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து கோஷம் போட ஆரம்பித்தனர்.
இதையடுத்து அவைக் காவலர்களை அழைத்து திமுகவினரை அவையை விட்டு வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே நுழைந்த திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்.
ஆனால் திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட பலர் வெளியேற மறுக்கவேஅவர்களை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு அவைக்கு வெளியே சென்று விட்டனர்.
ஆனால் திமுகவினர் லாபியில் நின்று கொண்டு அதிமுக அரசுக்கு எதிராகக் கோஷம் போட்டனர். அங்கிருந்தும்அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய துரைமுருகன், ஜெயலலிதாவின் குற்றச் சாட்டுக்களைமறுத்தார். மேலும் நடுநிலை வகிக்க வேண்டிய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும்துரைமுருகன் புகார் கூறினார்.
ராமச்சந்திரன் கூறுகையில், சேலைக் கிழிப்பு சம்பவமே ஒரு திட்டமிட்ட நாடகம். அன்றைய தினம் என்னையும்,திருநாவுக்கரசரையும் போயஸ் தோட்டத்திற்கு அழைத்த ஜெயலலிதா, நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்என்று கூறினார்.
சட்டசபையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முன்பே திட்டமிட்டுக் கொடுத்தார். அந்த உண்மையைசபையில் நான் சொல்லி விடுவேன் என்று பயந்துதான் பேச அனுமதி மறுத்தார்கள்.
சேலைக் கிழிப்பு சம்பவமே அன்று நடைபெறவில்லை. இதுதான் உண்மை என்றார் ராமச்சந்திரன்.
-->