மருத்துவ கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது
சென்னை:
தமிழகம் முழுவதிலும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்திலும் வகுப்புப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி தரப்பட உள்ளது. இதனால் மருத்துவக் கல்வியும் வியாபாரமாகிவிடும்என மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெறாத படிப்புகளுக்குவிரைவில் அங்கீகாரம் பெற்றுத் தர வேண்டும், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், கட்டணஉயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி இவர்கள் ஒரு நாள்அடையாளப்போராட்டம் நடத்தினர்.
ஹவுஸ் சர்ஜன்கள் எனப்படும் 5ம் ஆண்டு மாணவர்கள் மருத்துவமனைப் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்திலும்ஈடுபட்டனர்.
ஆனால், இதற்கு மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இன்று முதல் இவர்கள் காலவரையற்ற போராட்டம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் வகுப்புகளைப்புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இன்று மருத்துவக் கல்லூரிகள் எதுவுமே இயங்கவில்லை.
சென்னையில் உள்ள ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்ட்ரல் அருகே உள்ள அரசு தலைமைமருத்துவமனை முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிருபர்களிடம் பேசிய மாணவ, மாணவிகள் கூறுகையில்,
நாங்கள் கஷ்டப்பட்டு படித்து கட் ஆப் வாங்கி மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தோம். ஆனால், தனியார் கல்லூரிகள் வந்துவிட்டால்காசு வைத்திருப்பவன் எல்லாம் டாக்டராகிவிடுவான். அதே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களான எங்களுக்கு கிடைக்கும்அனுபவம் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது.
நாங்கள் மாவட்டத் தலைநகர்களில் உள்ள தலைமை அரசு மருத்துவனைகளில் கிட்டத்தட்ட 5 வருடம் பயிற்சி பெறுகிறோம். ஆனால்,தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பயிற்சி ஏதும் இருக்காது. ஆனாலும் டாக்டர்கள் என்றாகிவிடுவார்கள் என்றனர்.
அதேபோல மதுரை, திருச்சி, கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தங்கள் கல்லூரிகள் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்வியில் 79 பாடப் பிரிவுகளுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் வழங்காமல் உள்ளது. இதனால் இப்பாடப்பிரிவுகளைப் படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இந்த 79 பாடங்களில் 38 பிரிவுகள் சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிக்கப்பட்டு வருகின்றன.
சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரிகளில் இந்தப் பாடப் பிரிவுகளை எடுத்துள்ள மாணவ, மாணவியர் படிப்பையே முடித்துவிட்டனர்.ஆனாலும், தங்களை டாக்டர் என்று கூற முடியாத அவல நிலையில் அவர்கள் உள்ளனர் என்று தமிழக மருத்துவ மற்றும் பல் மருத்துவமாணவர் சங்கத் துணைத் தலைவர் டி. காரல் கூறினார்.
-->