சார்ஸ் பரவல்: நாளை டெல்லியில் மாநில அரசுகள் கூட்டம்
டெல்லி:
சார்ஸ் நோய் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளதையடுத்து அதைச் சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கமாநில அரசுகளின் கூட்டத்தை மத்திய அரசு நாளை அவசரமாகக் கூட்டியுள்ளது.
மத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். டெல்லியில் நடக்கும் இக் கூட்டத்தில் அனைத்து மாநிலநலத்துறைச் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சீனாவில் மேலும் 9 பேர் பலி:
இந் நிலையில் சார்ஸ் நோய்க்கு சீனாவில் மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 147 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு புதிதாகமருத்துவமனைகளில் அனுமதியாகியுள்ளனர்.
இதுவரை சீனாவில் 106 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர். 2,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து இன்னொரு நோயாளி:
இந் நிலையில் சீனாவில் இருந்து இந்தியா வந்த அந் நாட்டைச் சேர்ந்த 29 வாலிபர் காய்ச்சல் காரணமாக டெல்லி தொற்றுநோய்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் சார்ஸ் நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருந்து இவர் டெல்லி வந்தார். இவருக்கு சார்ஸ்இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் கோவா, ராஜஸ்தான், புனே, டெல்லி ஆகிய இடங்களில் 6 பேர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகஅடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
பெர்னாண்டசுக்கும் சோதனை நடக்கும்:
இதற்கிடையே இப்போது சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லிதிரும்பியவுடன் அவருக்கும் சார்ஸ் சோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சார்ஸ் நோயாளிகள்: மகாராஷ்டிரம் கோரிக்கை
சார்ஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலத்தின் எல்லா மாவட்டத்தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஒரு தனி அறையை மகாராஷ்டிர அரசு ஒதுக்கியுள்ளது.
அதே போல மாநிலத்தில் உள்ள 13 மருத்துவக் கல்லூரிகளிலும் சார்ஸ் நோயாளிகளுக்கென தனி அறைகளை உருவாக்கவும் அரசுஉத்தரவிட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூர், சீனா, ஹாங்காங்கில் இருந்து சார்ஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்குமாறும் மத்திய அரசுக்குமகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் பள்ளிகள் மூடல்:
இதற்கிடையே சார்ஸ் நோயால் சீனா திணற ஆரம்பித்துள்ளது. நோய் மேலும் பரவுவதைத் தடுக்க ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை மூட அந் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதிரியாருக்கும் சோதனை:
இதற்கிடையே பாங்காக்கில் சார்ஸ் நோயுடன் புனே வந்து திருமணம் செய்து கொண்ட ஜூலி என்ற பெண்ணுக்கு திருமணத்தை நடத்திவைத்த பாதிரியார் உள்பட, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், நர்ஸ்கள், அவருடன் பேசிய சர்ச் ஊழியர்கள் என சுமார் 20 பேர்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கும் சார்ஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஹோமியோபதியில் தீர்வு:
இதற்கிடையே சார்ஸ் நோய்க்கு ஹோமியோபதியில் மருந்து இருப்பதாக கேரள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஹோமியோபதி மருந்துகளான புல்சக்நில்லா (Pulsagnilla), டிரோனியா (Trionia) ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைஊக்குவித்து சார்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.