என்னை மனைவியாக்க நினைத்தார் அண்ணாச்சி: ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி சாட்சி
சென்னை:
தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக இன்று ஜீவஜோதி சாட்சியம் அளித்தார்.
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஜீவஜோதியின் தந்தை சரவண பவன் ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அப்போது ஜீவஜோதியின் மீது அண்ணாச்சி ராஜகோபால் கண் வைத்தார். ஜீவஜோதிக்கும் ராஜகோபாலுக்கும் இடையே நட்பு மலர்ந்ததாகவும் கூட கூறப்பட்டது.
இந் நிலையில் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். கொடைக்கானல் மலையில் அவரது சிதைந்து போன உடல் கிடைத்தது.
இதையடுத்து ராஜகோபால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனாலும் ஜீவஜோதி- அண்ணாச்சி தொடர்புகள் தொடர்ந்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஜீவஜோதி தனது தாய்மாமாக்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அண்ணாச்சியிடம் அந்த மாமன்கள் பணம் பறித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் தனது மாமா வீட்டில் தங்கியிருந்த ஜீவஜோதியை சந்திக்க நாகப்பட்டிணம் சென்றார் ராஜகோபால். அங்கு ஏதோ, பிரச்சனை ஏற்பட்டதையடுத்து ஜீவஜோதியை ராஜகோபால் கடத்த வந்ததாக தாய்மாமன்கள் போலீசில் புகார் தந்தனர்.
இதையடுத்து அந்த வழக்கில் கைதாகி பின்னர் விடுதலையானார். ஆனால், அவரது ஜாமீன் பின்னர் ரத்தானதால் மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், ஜீவஜோதிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருப்பது போலவும், தனக்கு எதிராக ஜீவஜோதி சாட்சி சொல்ல மாட்டார் என்றரதியிலும் செய்திகளைப் பரப்பி வந்தார் ராஜகோபால்.
இதை ஜீவஜோதி மறுத்து வந்தார். இந் நிலையில் இந்தக் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் இன்று ஜீவஜோதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சி விவரம்:
நானும் என் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். சென்னை அசோக் நகரில் தனிக்குடித்தனம் சென்றோம். தனியாக தொழில் தொடங்க யோசித்தபோது சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் உதவி கிடைத்தது. பணம் கொடுத்து உதவினார்.
அதன் பின்னர் இரவு- பகலாக போன் செய்து தொந்தரவு செய்தார். என் கணவருடன் நான் உடலுறவு கொள்ளக் கூடாது என்று கூறினார். அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் சொன்னார். பின்னர் உடல் நலமின்றி நான் மருத்துவமனையில் இருந்தபோதும் வந்து தொந்தரவு கொடுத்தார்.
என்னை மூன்றாவது மனைவியாக அடைய அவர் துடிப்பது புரிந்தது. நானும் கணவரும் எங்கு சென்றாலும் ராஜகோபாலின் ஆட்கள் வந்து தொந்தரவு கொடுத்தனர். எங்களை சேர்ந்திருக்க விடாமல் செய்தனர். அவர் நானும் கணவரும் புகார் கொடுக்க சென்றபோது போலீசார் வாங்கவில்லை.
இதையடுத்து 2001ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னரை (முத்துக்கருப்பன்) சந்தித்து புகார் கொடுத்தோம். அதன் பின்னரும் வீட்டில் இருந்தால் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று பயந்து லாட்ஜில் தங்கினோம். அங்கிருந்து கடற்கரை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்குப் போனோம்.
அப்போது எங்களை ராஜகோபாலின் ஆட்கள் இடை மறித்துத் தாக்கி, கடத்திச் சென்று சென்னையில் ஓரிடத்தில் தங்க வைத்தனர்.
இவ்வாறு இன்று சுமார் 3 மணி நேரம் ஜீவஜோதி வாக்குமூலம் தந்தார்.
ஜீவஜோதி வாக்குமூலம் தந்தபோது நீதிமன்றத்தில் இருந்த ராஜகோபால் இடையிடையே எழுந்து, பொய் சொல்கிறாள் என்று கத்தினார். ஆனால், குறுக்கு விசாரணையின்போது அதைப் பற்றி உங்கள் வழக்கறிஞர் பேசலாம். இப்போது நீங்கள் அமைதியாக இருங்கள் என நீதிபதி அவரை உட்கார வைத்தார்.
தனது தாயார் தவமணி, மாமாவுடன் ஜீவஜோதி நீதிமன்றம் வந்தார். வாக்குமூலம் தரும்போது தாயாரையும் மாமாவையும் நீதிபதி வெளியே நிற்கச் சொல்லிவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று ராஜகோபால் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.












Click it and Unblock the Notifications